விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோகுல் (17), யுவராஜ் (17) மற்றும் பிரசன்னா (17) ஆகிய மூவரும் நண்பர்கள். மூவருமே இந்த ஆண்டு பிளஸ்-2 வகுப்பு படித்து முடித்தவர்கள். நேற்று நள்ளிரவில் 3 பேரும் ஒரே பைக்கிள் சாத்தூர் நோக்கி டீ குடிக்க சென்று கொண்டிருந்தனர். மேட்டுப்பட்டி விலக்கு பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, சென்னை நோக்கி அதிவேகமாக வந்த ஆம்னி பஸ், மாணவர்கள் சென்ற பைக் மீது பயங்கரமாக மோதியது.
பைக்கில் பயணம் செய்த கோகுல், யுவராஜ் மற்றும் பிரசன்னா ஆகிய 3 பேருமே தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே பிரசன்னா, யுவராஜ் இருவரும் உயிரிழந்த நிலையில், கோகுல் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் செல்லும் வழியிலே அவர் உயிரிழந்துவிட்டார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சாத்தூர் தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். உயிரிழந்த மாணவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பேருந்தை ஓட்டி வந்த 26 வயது டிரைவர் ஆம்ஸ்ட்ராங் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மூன்று மாணவர்களின் பெற்றோரும் உடலை பார்த்து கதறி துடித்தனர். பள்ளிப்படிப்பை முடித்து பல கனவுகளுடன் உயர்கல்விகு செல்ல திட்டமிட்டிருந்த மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.



