தமிழக வெற்றிக் கழகம் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் உரிய காலக்கட்டத்தில் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக சார்பில் தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான ரூ.4,000 உதவித்தொகை போன்ற பிரதான வாக்குறுதிகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர், “பெரும்பாலான வாக்குறுதிகளை நமது அரசு ஏற்கனவே படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. எஞ்சியுள்ள ஒரு சில வாக்குறுதிகளைப் பொறுத்தவரை, மாநிலத்தின் நிதி ஆதாரங்களைச் சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்ததும் முதலமைச்சர் கண்டிப்பாக முறைப்படி அறிவிப்பார்” என்றார்.
தற்போதைய கடன்களுக்கு மத்தியிலும் மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு அரசு இயங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், “தற்போது நிலவும் நிதிச் சூழல் மற்றும் பெரும் கடன் சுமைக்கு இடையே, எந்தெந்த திட்டங்களை எப்போது செயல்படுத்த முடியுமோ அதை உடனடியாக நிறைவேற்ற முதலமைச்சர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். நாங்கள் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் அதற்கான சரியான காலகட்டத்தில் நிச்சயமாக முழுமையாகச் செயல்படுத்தப்படும்” என்று கூறினார்.
Read More : பழைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுறோமா? அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி..!!



