தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு கூடுதல் வரி விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, மதுபான பாட்டில் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.20 வரை சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக தினசரி அதிகளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மதுபானங்களை பயன்படுத்திய பின்னர் காலியாகும் பாட்டில்களை சேகரித்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் முறையாக அப்புறப்படுத்துதல் போன்றவற்றில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில், மதுபான பாட்டில்களுக்கு புதிய தீர்வை வரியை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில் ஒன்றுக்கு ரூ.20-க்கு மிகாமல் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை வசூலிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்படுகிறது.
இந்த தீர்வைத் தொகையை மதுபான விற்பனையில் ஈடுபடும் வணிகர்களிடம் இருந்து வசூலிக்கும் வகையில் விதிமுறைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், மதுபானத்தின் வகை, அதன் அளவு மற்றும் அது அடைக்கப்பட்டுள்ள பாட்டில் அல்லது கொள்கலனின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு கட்டண விகிதங்களை அரசு நிர்ணயிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த பணிகளுக்கு இந்த வருவாய் பயன்படுத்தப்படும்? புதிய வரி மூலம் கிடைக்கும் இந்த வருவாயை சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, காலி மதுபான பாட்டில்களை மறுசுழற்சி செய்வது, அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றுவது மற்றும் மறுபயன்பாட்டை ஊக்குவிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படலாம்.
அதேபோல், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. மதுப்பழக்கத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் மதுவால் ஏற்படும் உடல்நலம் மற்றும் சமூக பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படலாம்.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாத்தல், பாதிக்கப்பட்ட இயற்கை வளங்களை மீட்டெடுத்தல் போன்ற பணிகளுக்கும் இந்த வருவாய் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான விலை அதிகரிக்குமா? இதற்காக 2006-ம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், மதுபான விற்பனையில் கூடுதல் வரிச்சுமை உருவாகும்.
இதன் காரணமாக மதுபானங்களுக்கான விலை உயர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 வரை புதிய தீர்வை விதிக்கப்படுவதால், அதன் தாக்கம் நுகர்வோர் செலுத்தும் இறுதி விலையிலும் பிரதிபலிக்கக்கூடும்.
ஒருபுறம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு நிதி திரட்டும் நடவடிக்கையாக இந்த புதிய தீர்வை பார்க்கப்படுகிறது. மறுபுறம், மதுபானங்களின் விலையில் கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கையாகவும் இது கவனம் பெற்றுள்ளது.



