வேலைப்பளு நிறைந்த காலையையோ அல்லது தூக்கமில்லாத இரவையோ கழித்த பிறகு, மதிய வேளையில் சிறிது நேரம் தூங்குவது பலருக்குப் புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் தருகிறது. 10 முதல் 30 நிமிடங்கள் வரையிலான குறுகிய நேரத் தூக்கம் கவனச்செறிவை அதிகரிக்கும் என்றாலும், தினசரி நீண்ட நேரம் தூங்குவது அல்லது தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்வது உங்களின் உடல் கேட்கும் உதவியின் சமிக்ஞையாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து நொய்டா மேதாந்தா மருத்துவமனையின் சுவாச மற்றும் தூக்கவியல் துறை இயக்குநர் டாக்டர் மிருணால் சர்க்கார் கூறுகையில், இரவில் சரியான தூக்கம் இல்லாதவர்கள் அல்லது மனதிற்கு அதிக வேலை தரும் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு 10 முதல் 30 நிமிட மதியத் தூக்கம் பயனுள்ளது என்று தெரிவிக்கிறார். ஆனால், இந்த மதியத் தூக்கம் எப்போதாவது இருக்கும் பழக்கமாக இல்லாமல், தினசரி அத்தியாவசியத் தேவையாக மாறும்போது தான் ஆரோக்கிய சிக்கல்கள் எழுகின்றன.
இரவில் போதுமான நேரம் தூங்கிய பிறகும் பகலில் சோர்வாக உணர்ந்தால், அது அப்சுட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா போன்ற சுவாசக் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம். தூக்கத்தின் போது சுவாச பாதையில் ஏற்படும் அடைப்பினால் இரவு கால தூக்கம் தடைபட்டு, பகலில் அதிகப்படியான தூக்கம் உண்டாகிறது. அதேபோல், இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மைப் பிரச்சினையால் இரவில் சரியாகத் தூங்க முடியாதவர்களும் பகலில் தூங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
இது தவிர, இரவில் கால்களில் ஏற்படும் அசௌகரியத்தால் தூக்கத்தை கெடுக்கும் ‘ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்’, தைராய்டு கோளாறுகள், நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் நரம்பியல் சார்ந்த பிற பாதிப்புகளும் பகல் நேரச் சோர்வுக்குக் காரணமாக அமைகின்றன. மேலும், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சினைகளும் உடலின் ஆற்றலைக் குறைத்து, அடிக்கடி தூங்கும் எண்ணத்தை உருவாக்குகின்றன.
குறிப்பாக, முதியவர்களிடம் காணப்படும் நீண்ட மற்றும் தேவையில்லாத பகல் நேரத் தூக்கம், அவர்களின் உடலிலுள்ள ஏதோவொரு பெரிய நோயின் அறிகுறியாகவே வெளிப்படுகிறது என்பதால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. எனவே, மதியத் தூக்கம் உங்களின் அன்றாட வேலையைப் பாதித்தாலோ அல்லது இரவில் நன்றாகத் தூங்கிய பிறகும் பகலில் தூக்கம் சொக்கிக்கொண்டே இருந்தாலோ, உடனடியாக ஒரு தூக்கவியல் நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.


