சென்னையில் பொதுமக்களின் இணைய பயன்பாட்டை எளிதாக்கும் வகையில், 44 இடங்களில் இலவச வைபை (WiFi) சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இலவச வைபை (WiFi) வசதி 10.08.2026 முதல் மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய பகுதிகளில் இலவச வைபை (WiFi) வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் முதற்கட்டமாக, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் தலைமைச் செயலகப் பூங்கா ஆகிய பகுதிகளில் ஏற்கனவே பயன்பாட்டில் இல்லாமல் இருந்த வைபை (WiFi) வசதிகள் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான பகுதியில் 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரையில் 5 இடங்களிலும், தலைமைச் செயலகப் பூங்காவில் 12 இடங்களிலும் இலவச வைபை (WiFi) வசதி வழங்கப்படுகிறது. மொத்தமாக இந்த 3 பகுதிகளிலும் 44 இடங்களில் பொதுமக்கள் இலவசமாக வைபை பயன்படுத்த முடியும்.
இலவச வைபை (WiFi) வசதியைப் பெற பொதுமக்கள் தங்களது செல்போனில் வைபை (WiFi) வசதியை ஆன் செய்ய வேண்டும். அதில் தோன்றும் வைபை (WiFi) இணைப்பைத் தேர்வு செய்த பிறகு, QR Code-ஐ கிளிக் செய்ய வேண்டும்.அதன்பின்னர், பதிவு செய்யப்படும் செல்போன் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த OTP எண்ணை உள்ளீடு செய்ததும் வைபை (WiFi) இணைப்பு கிடைக்கும். இதன் மூலம் பொதுமக்கள் இலவசமாக இணைய வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் மற்ற கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட இடங்களிலும் ஏற்கனவே பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் வைபை (WiFi) வசதிகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் புதிதாக இலவச வைபை (WiFi) வசதிகளை ஏற்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read:குட் நியூஸ்: சென்னையில் இன்று முதல் ரேபிஸ் தடுப்பூசி முகாம்..! 2 லட்சம் தெருநாய்களுக்கு தடுப்பூசி..!



