சென்னையில் தெருநாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் நோயை கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில் மிகப்பெரிய தடுப்பூசி முகாம் இன்று (ஆகஸ்ட் 11) முதல் தொடங்குகிறது.
இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 2 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதுடன், அக மற்றும் புற ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளும் வழங்கப்பட உள்ளன.
30 குழுக்கள் களத்தில் இறக்கம்:
மாநகராட்சி சார்பில் இந்தப் பணிக்காக 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் ஒரு நாளில் சுமார் 100 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதன்படி தினமும் சுமார் 3,000 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 3 மண்டலங்களில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தெருநாய்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று தடுப்பூசி:
மாநகராட்சி பணியாளர்கள் தெருநாய்களை அவை வசிக்கும் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான முறையில் பிடித்து, கால்நடை மருத்துவர்கள் மூலம் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்துகளை செலுத்த உள்ளனர்.
தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்களை அடையாளம் காணும் வகையில் வண்ண சாயம் பயன்படுத்தப்பட்ட பின்னர், அவை பிடிக்கப்பட்ட அதே பகுதிகளில் மீண்டும் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளுக்கும் இலவச தடுப்பூசி:
தெருநாய்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்கள் வளர்க்கும் நாய்கள் மற்றும் பூனைகளுக்கும் இந்த முகாமின் மூலம் இலவச ரேபிஸ் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
75 வேலை நாட்களில் இலக்கு:
முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியின் 1, 2 மற்றும் 4-வது மண்டலங்களில் முகாம் தொடங்குகிறது. தொடர்ந்து மற்ற மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
மண்டலம் 1-ல் 14 நாட்களும், மண்டலம் 2-ல் 9 நாட்களும், மண்டலம் 4-ல் 14 நாட்களும் முதற்கட்ட பணிகள் நடைபெற உள்ளன. ஒட்டுமொத்தமாக 75 வேலை நாட்களுக்குள் சுமார் 2 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.
“ரேபிஸ் இல்லாத சென்னை” என்ற இலக்கை அடைய பொதுமக்கள், செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.



