லடாக்கின் லே பகுதியில் வியாழக்கிழமை அன்று ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த ஒன்றிய பிரதேசத்தில் நான்கு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, இந்த இரண்டாவது நிலநடுக்கம் காலை 9.54 மணியளவில் ஏற்பட்டது. இது வடக்கே 36.765 அட்சரேகையிலும், கிழக்கே 75.326 தீர்க்கரேகையிலும், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது.
முன்னதாக, அதிகாலை 6.05 மணியளவில் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான சக்திவாய்ந்த முதல் நிலநடுக்கம் லடாக்கை தாக்கியது. இது வடக்கே 36.881 அட்சரேகையிலும், கிழக்கே 74.402 தீர்க்கரேகையிலும், பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது. இருப்பினும், இந்த இயற்கை சீற்றங்களால் இதுவரை எந்தவொரு உயிர்ச்சேதமோ அல்லது சொத்துக்களுக்கு பெரிய அளவிலான சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.



