ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறும் சம்பளதாரர்களுக்கு, அவர்களின் ஓய்வுக்கால தேவையைப் பூர்த்தி செய்ய வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) மட்டுமே போதுமானதா என்பது குறித்த முக்கிய ஆய்வுகள் வெளியாகியுள்ளன. மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் இ.பி.எஃப் நிதி, கூட்டு வட்டி அடிப்படையில் பல ஆண்டுகள் வளர்ந்து பெரிய தொகையாக மாறினாலும், பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளும்போது அது மட்டுமே முழுமையான பாதுகாப்பைத் தராது என நிதி வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
30 வயதுடைய ஒருவர் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று, 60 வயதில் ஓய்வுபெறுகிறார் என வைத்துக்கொண்டால், அவரது அடிப்படை சம்பளம் 50 சதவீதமாகவும் இ.பி.எஃப் வட்டி 8.25 சதவீதமாகவும் இருக்கும் பட்சத்தில் கணிசமான தொகை சேரும். ஆண்டுக்கு 5 சதவீத சம்பள உயர்வில் 3 முதல் 3.2 கோடி ரூபாயும், 8 சதவீத உயர்வில் 4.5 முதல் 5 கோடி ரூபாயும், 10 சதவீத உயர்வில் 6.2 முதல் 6.5 கோடி ரூபாய் வரையிலும் சேர வாய்ப்புள்ளது. 4 சதவீதப் பாதுகாப்பான திரும்பப் பெறும் விகிதத்தை கணக்கிட்டால், 5 கோடி ரூபாய் சேமிப்பு இருக்கும்போது மாதந்தோறும் 1.6 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
இருப்பினும், வருங்கால பணவீக்கமே இங்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 6 சதவீதப் பணவீக்கம் நிலவினால், இன்று 1 லட்சம் ரூபாயாக இருக்கும் மாதாந்திர குடும்பச் செலவு, 30 ஆண்டுகளுக்குப் பிறகு 5.7 லட்சம் ரூபாயாக உயர்ந்துவிடும். எனவே, இன்று பெரிய தொகையாகத் தோன்றும் 5 கோடி ரூபாய் கூட எதிர்கால மருத்துவச் செலவுகள் மற்றும் 25 முதல் 30 ஆண்டுகள் நீடிக்கும் ஓய்வுக்கால வாழ்க்கைப் பராமரிப்பிற்குப் போதுமானதாக இருக்காது. இன்றைய 1 லட்சம் ரூபாய் வாழ்க்கை முறையை ஓய்வுக்குப் பிறகும் தொடர குறைந்தபட்சம் 13 கோடி ரூபாய் வரை தேவைப்படலாம் எனக் கணக்கிடப்படுகிறது.
மேலும், பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியரின் உண்மையான அடிப்படைச் சம்பளத்திற்குப் பதிலாக, சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட 15,000 ரூபாய் வரம்பை மட்டுமே இ.பி.எஃப் பங்களிப்பிற்கு எடுத்துக்கொள்கின்றன. இத்தகைய சூழலில், 15 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியருக்கு ஓய்வு பெறும்போது 35 முதல் 40 லட்சம் ரூபாய் மட்டுமே சேரும் அபாயமும் உள்ளது.
எனவே, ஊழியர்கள் தங்களின் நிறுவனம் உண்மையான அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் பங்களிக்கிறதா என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் இ.பி.எஃப்-ஐ மட்டுமே முழுமையாக சார்ந்திருக்காமல், தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS), பரஸ்பர நிதிகள் (Mutual Funds) மற்றும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) போன்ற பிற முதலீட்டு திட்டங்களையும் ஒருங்கிணைத்துத் திட்டமிடுவதே வலுவான ஓய்வுக்கால நிதியை உருவாக்க உதவும்.



