இந்தியாவில் மத வழிபாட்டுத் தலங்களில் பெண்கள் நுழைவு தொடர்பான விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) உச்ச நீதிமன்றத்தில் அளித்த விளக்கம் இந்த விவகாரத்தில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வரும் நிலையில், மசூதிகளில் பெண்கள் நுழைந்து தொழுகை செய்வதற்கு இஸ்லாத்தில் எந்தவிதத் தடையும் இல்லை என AIMPLB திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில், தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வில் வாதித்த வாரியத்தின் வழக்கறிஞர், ஆண்கள் மசூதிகளில் கூட்டு தொழுகை நடத்துவது கட்டாயம் என்றாலும், பெண்களுக்கு அது கட்டாயமல்ல என்று விளக்கினார். பெண்கள் வீட்டிலேயே தொழுவது சிறந்ததாகக் கருதப்படுகிறதென கூறிய அவர், அதே நேரத்தில் பெண்கள் மசூதிக்கு வர விரும்பினால் அதைத் தடுக்க எந்தவித மதத் தடையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
மேலும், முஹம்மது நபி காலத்திலிருந்தே பெண்கள் மசூதிகளில் தொழுகை செய்வது அனுமதிக்கப்பட்ட ஒன்று என்றும், அவர்களைத் தடுக்கக் கூடாது என்பது இஸ்லாமிய போதனைகளின் முக்கியக் கருத்தாகும் என்றும் வாதிடப்பட்டது. இந்த நிலைப்பாட்டில் அனைத்து இஸ்லாமியப் பிரிவினரிடமும் ஒருமித்த கருத்து நிலவுகிறது என்றும் AIMPLB தெரிவித்துள்ளது.
விசாரணையின் போது, மசூதிகளில் பெண்களுக்காக தனி நுழைவாயில்கள் மற்றும் தனிப்பட்ட தொழுகை இடங்கள் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. சில இடங்களில் இடவசதி குறைபாடு போன்ற நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம் என்றாலும், கொள்கை ரீதியாக பெண்களுக்கு எந்தவிதத் தடையும் இல்லை என்று வாரியம் விளக்கம் அளித்தது.
இந்த முக்கியமான விளக்கம், மத வழிபாட்டுத் தலங்களில் பாலின சமத்துவம் குறித்த நாட்டளவிலான விவாதங்களுக்கு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சபரிமலை வழக்கின் தீர்ப்பில் இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: என்னா அடி..! மனைவியின் கொடூர தாக்குதலை லேப்டாப்பில் பதிவு செய்த நபர்..! வைரல் வீடியோ..!



