உணவு உற்பத்தி, சுற்றுலாப் பாதுகாப்பு, இயற்கை எழில் மற்றும் சர்வதேச பயண வலிமை எனப் பல்வேறு துறைகளில் உலக அளவில் தனித்துவமான சாதனைகளை படைத்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள நாடுகளின் முக்கிய பட்டியல்கள் வெளியாகியுள்ளன.
தென் அமெரிக்க நாடான கயானா, ‘நேச்சர் புட்ஸ்’ அமைப்பின் சர்வதேச ஆய்வில் உலகின் 186 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி உணவுத் தன்னிறைவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்நாடு தனது குடிமக்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஊட்டச்சத்துத் தேவைகளை 100 சதவீதம் உள்நாட்டு உற்பத்தியின் மூலமே முழுமையாகப் பூர்த்தி செய்கிறது.
சுமார் 83,000 சதுர மைல் பரப்பளவும் 8 லட்சம் மக்கள் தொகையும் கொண்ட இந்நாடு, விவசாயத்திற்காகக் காடுகளை அழிக்காமல் 85 சதவீத வனப்பகுதிகளைப் பாதுகாத்து வருகிறது. மேலும், உலகளவில் குடிநீர் வளத்தில் இரண்டாம் இடம் வகிக்கும் கயானா, தனக்குப் போக எஞ்சிய மாவுச்சத்து நிறைந்த உணவுகளையும் பழங்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பில் ஐரோப்பிய நாடான சான் மரினோ சர்வதேச அளவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அமெரிக்காவின் ‘ஸ்கொயர் மவுத்’ காப்பீட்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், தனியாகப் பயணம் செய்வதற்கு உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடாக இது தேர்வு செய்யப்பட்டுள்ளது. வெறும் 61 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் 35,000 மக்கள் தொகையும் கொண்ட இந்நாட்டில், இரவிலும் பெண்கள் அச்சமின்றி நடமாடும் வகையில் மிக குறைந்த குற்ற விகிதமும் உயரிய தெருப் பாதுகாப்பும் நிலவுகிறது. இதனால் ஆண்டுதோறும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் இந்நாட்டிற்குப் படையெடுத்து வருகின்றனர்.
இயற்கை எழில் கொஞ்சும் தீவுகளுக்கான சர்வதேசத் தரவரிசையில், ‘பிக் 7 டிராவல்’ அமைப்பு வெளியிட்ட ‘உலகின் தலைசிறந்த 50 தீவுகள்’ பட்டியலில் அண்டை நாடான இலங்கை முதலிடத்தைப் பிடித்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கலாபகோஸ் உள்ளிட்ட சர்வதேச தீவுகளை முந்தியுள்ள இலங்கையின் 1,300 கிலோமீட்டர் நீள கடற்கரைகள், சிகிரியா, கண்டி, தம்புள்ளை போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்கின்றன. அத்துடன் யால தேசியப் பூங்காவின் வனவிலங்குகள், திமிங்கலங்கள் உலாவும் மிரிஸ்ஸ கடல் பகுதி மற்றும் கண்கவர் மலை ரயில் பயணம் ஆகியவை பயணிகளுக்குத் தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றன.
சர்வதேச பயண ஆற்றலை பொறுத்தவரை, ‘ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்’ வெளியிட்ட நடப்பாண்டு அறிக்கையில் உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டைக் கொண்ட நாடாகச் சிங்கப்பூர் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமலோ அல்லது ‘விசா ஆன் அரைவல்’ முறையிலோ உலகின் 195 நாடுகளுக்கு எளிதாகப் பயணம் செய்ய முடியும். தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய நிதி மற்றும் பொருளாதார மையமாகத் திகழும் இந்நாட்டிற்கு அடுத்தபடியாக பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.



