சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் தேச பிதா மகாத்மா காந்தியின் வாழ்வையும், அவர் உலகிற்குப் போதித்த அகிம்சை வழியையும் போற்றும் வகையில் இந்தச் சிறப்புத் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்திய சுதந்திர இயக்கத்தின் சிற்பியான மகாத்மா காந்தி தனது வாழ்க்கையில் 21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் செலவிட்டுள்ளார். இதனால், காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 அன்று உலகக் கோப்பைத் தொடரைத் தொடங்குவது அவருக்குச் செய்யும் மிகச் சரியான மற்றும் பொருத்தமான கவுரவமாக இருக்கும் என்று ஐசிசி கருதுகிறது. மேலும், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள இந்த முக்கியப் போட்டியின் தொடக்க நிகழ்வை நடத்த ஐசிசி பரிசீலித்து வருகிறது.
‘கிரிக்பஸ்’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, அமைதி மற்றும் அகிம்சையை முன்னிறுத்திய அந்தத் தலைவருக்குச் சிறப்பு அஞ்சலி செலுத்தும் விதமாக, 2027 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை காந்தி ஜெயந்தியன்று தொடங்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.
முன்னதாக அக்டோபர் 8 ஆம் தேதி உலகக் கோப்பை தொடங்கும் என்றும், அக்டோபர் முதல் வாரம் பயிற்சி ஆட்டங்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டு, தொடர் அக்டோபர் 2 அன்று தொடங்கவிருப்பதோடு, இறுதிப் போட்டி நவம்பர் 21 அன்று நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று நாடுகளில் 14 அணிகள் பங்கேற்கும் இந்த மாபெரும் உலகக் கோப்பைத் தொடர் நடைபெறுகிறது. இத்தொடருக்காக தென்னாப்பிரிக்காவில் 8 மைதானங்களும், ஜிம்பாப்வேயில் 3 மைதானங்களும், நமீபியாவில் 1 மைதானம் என மொத்தம் 12 மைதானங்கள் அடையாளம் காணப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.


