மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தித் திராவிடர் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகத் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில் கடந்த ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை தமிழகம் தழுவிய பைக் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான முன் அனுமதியை டிஜிபியிடம் கோரியிருந்த நிலையில், தொடங்குவதற்குச் சில தினங்களுக்கு முன்பு காவல்துறை திடீரென அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்துத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் முந்தைய விசாரணையின்போது, ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவது குடிமக்களின் அடிப்படை உரிமை என்றும், போராட்டம் செய்பவர்கள் ஒன்றும் சமூக விரோதிகள் அல்ல என்றும் குறிப்பிட்ட நீதிபதி வி.லட்சுமிநாராயணன், சாலையில் அமைதியாகப் போராடாமல் மக்கள் ஹெலிகாப்டரிலா சென்று போராட்டம் நடத்த முடியும் என காவல்துறைக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அப்போதைய களச் சூழலைக் கருத்தில் கொண்டே தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டதாகவும், நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்குத் தமிழக அரசு எதிரானது அல்ல என்றும் தெரிவித்தார். மேலும், புதிய தேதியுடன் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். மனுதாரர் தரப்பில், வரும் ஆகஸ்ட் 22 முதல் 25 வரை அனைத்து மோட்டார் வாகன விதிகளையும் முறையாகப் பின்பற்றி, அனுமதிக்கப்பட்ட வேகக்கட்டுப்பாட்டுடன் மட்டுமே பேரணி நடைபெறும் என உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Read More : காவிரி விவகாரம்..!! அமித்ஷா, டி.கே. சிவக்குமார் முன்பு பாயிண்டுகளை அடுக்கிய முதல்வர் விஜய்..!!



