ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை சிதைத்த கள்ளக்காதல், இறுதியில் கணவரையே தனது மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைக்கும் நிலைக்கு கொண்டு சென்ற சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
சந்தவுளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜீவநாத் ராஜ்பார். இவரது மனைவி சரிதா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வேலைக்காக ஜீவநாத் டெல்லியில் தங்கி வெல்டிங் தொழில் செய்து வந்த நிலையில், சரிதா குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார்.
கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், 45 வயதான சரிதாவுக்கு ரயிலில் பட்டாணி விற்பனை செய்து வந்த 25 வயது இளைஞர் அஜய்யுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவாக மாறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு சரிதா, அஜய்யுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதை அறிந்த ஜீவநாத் டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி, மனைவியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் ரயில் நிலையம் ஒன்றில் சரிதாவையும் அஜய்யையும் ஜீவநாத் கண்டுபிடித்துள்ளார். அப்போது, தன்னுடன் மீண்டும் குடும்ப வாழ்க்கைக்கு திரும்புமாறு மனைவியிடம் அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், சரிதா இனிமேல் அஜய்யுடன் மட்டுமே வாழ விரும்புவதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மனைவியின் முடிவை மாற்ற முடியாது என்பதை உணர்ந்த ஜீவநாத், அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளார். சரிதா மற்றும் அஜய் இருவரையும் பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற அவர், இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதுகுறித்து ஜீவநாத் கூறுகையில், “நான் சரிதாவுடன் தொடர்ந்து வாழ விரும்பினேன். ஆனால், அவளுக்கு என்னுடன் வாழ விருப்பம் இல்லை. அதனால் அவள் விருப்பப்படியே செய்து கொடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தனது திருமண வாழ்க்கை முறிந்ததற்கு ஜீவநாத் தான் காரணம் என சரிதா குற்றம்சாட்டியுள்ளார். குடும்பச் செலவுகளுக்கு போதுமான பணத்தை அவர் அனுப்பவில்லை என்றும், அடிக்கடி தன்னுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் சரிதா தெரிவித்துள்ளார்.
கணவன், மனைவி இடையேயான பிரச்சினைகளுக்கு நடுவே உருவான திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு, ஒரு குடும்பத்தையே பிரிக்கும் அளவுக்கு சென்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்.. ஜூஸில் விஷம் கலந்து கொன்ற மனைவி, காதலன் கைது!



