சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்ற ரயிலில் வீசப்பட்ட ரத்தக்கறை படிந்த சூட்கேசில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஆந்திரா சென்ற ரயிலில் கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நிற சூட்கேசில் பெண்ணின் கை, கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் கிடந்ததை தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், கண்ணாடி அணிந்த இளம் பெண்ணும், தாடி வைத்த இளைஞரும் அந்தப் பெட்டியை ரயிலில் வைத்துவிட்டு, உடனடியாக கூடுவாஞ்சேரி நோக்கிச் செல்லும் புறநகர் மின்சார ரயிலில் ஏறித் தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தடயங்களைச் சேகரித்து கூடுவாஞ்சேரி மசூதி அருகே பூட்டியிருந்த அவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசாருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண்ணைக் கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டியதோடு, தடயங்களை முழுமையாக மறைப்பதற்காக பிரியாணி சமைக்கும் பெரிய பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து உடல் பாகங்களைச் சமைக்க முயன்ற கொடூரம் அம்பலமானது. எஞ்சிய பாகங்களை மட்டுமே அவர்கள் சூட்கேசில் அடைத்து ரயிலில் வீசிச் சென்றுள்ளனர்; எனினும், அப்பெண்ணின் தலை இதுவரை மீட்கப்படவில்லை.
போலீசாரின் தொடர் விசாரணையில், இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் பகவதி பாஜி மற்றும் மாணிக் லஸ்கர் என்பதும், அவர்களுடன் கடந்த பத்து நாட்களாகத் தங்கியிருந்த ஹைதுல் நிஷா என்ற பெண்ணையே தகராறு காரணமாக கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கொலையாளிகள் இருவரும் தற்போது ஒடிசாவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களை கைது செய்ய தமிழக தனிப்படை போலீசார் ஒடிசா விரைந்துள்ளனர்.
Read More : LPG சிலிண்டர் வாடிக்கையாளர்களே கவனம்! ஆகஸ்ட் 23-க்குள் இந்த வேலையை முடிக்கணும்; இல்லையெனில் சிக்கல்!



