குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் முதலில் செய்யும் முக்கியமான விஷயங்களில் ஒன்று பிறந்த நேரத்தைத் துல்லியமாக பதிவு செய்வது. காரணம், இந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு ஜாதகம் கணிப்பது பல குடும்பங்களில் நீண்டகாலமாக பின்பற்றப்படும் வழக்கமாக உள்ளது. ஆனால், ஜாதகத்தை எப்போது எழுத வேண்டும், எப்போது பலன் பார்க்க வேண்டும் என்பதில் குடும்பத்துக்கு குடும்பம் வெவ்வேறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன.
ஜோதிட நம்பிக்கைகளின்படி, குழந்தை பிறக்கும் நேரத்தில் கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலையை வைத்து ஜாதகம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தையின் எதிர்கால வாழ்க்கை, கல்வி, தொழில், திருமணம் உள்ளிட்ட விஷயங்களை கணிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
பிறந்த உடனேயே ஜாதகம் எழுதும் வழக்கம் உள்ள குடும்பங்களில், குழந்தை பிறந்த நேரத்திலேயே ஜாதகம் கணித்து வைத்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. அதேசமயம், இதுபோன்ற குடும்பப் பாரம்பரியம் இல்லாதவர்கள் குழந்தைக்கு ஒரு வயது நிறைவடைந்த பிறகு ஜாதகம் எழுதலாம் என்ற கருத்தும் உள்ளது.
ஆனால் ஜாதகம் எழுதி வைத்திருப்பது வேறு; அதற்கான பலன்களை தொடர்ந்து கேட்பது வேறு என ஜோதிட நம்பிக்கைகளில் கூறப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஜாதகத்தைப் பார்த்து முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், பொதுவாக 12 வயது வரை குழந்தைகளின் ஜாதகப் பலன்களை பார்ப்பதைத் தவிர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலப் பிரச்சினைகள், தீவிர நோய் பாதிப்பு அல்லது கல்வியில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட்டால், குடும்பத்தினர் தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் ஜோதிட ஆலோசனையைப் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.
12 வயதுக்குப் பிறகு குழந்தையின் உயர்கல்வி, வெளிநாட்டுப் படிப்பு அல்லது எதிர்காலத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் ஜாதகத்தைப் பார்க்கலாம் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
பெண் குழந்தைகள் விஷயத்தில், ஒரு வயதுக்குப் பிறகு ஜாதகம் கணித்து வைத்துக்கொள்ளலாம். ஆனால் பருவமடையும் காலம் வரை தொடர்ந்து பலன் பார்க்க வேண்டியதில்லை என்றும் கூறப்படுகிறது. பருவமடையும் நேரத்தைத் துல்லியமாக பதிவு செய்து, அதன் அடிப்படையில் ‘ருது ஜாதகம்’ கணிப்பது சில ஜோதிட மரபுகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக எதிர்கால திருமணப் பொருத்தத்தின்போது இந்தத் தகவல் பயன்படுத்தப்படலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது.
இதனால், குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் எழுத வேண்டுமா அல்லது ஒரு வயதுக்குப் பிறகு எழுத வேண்டுமா என்பது பெரும்பாலும் குடும்ப வழக்கம் மற்றும் ஜோதிட நம்பிக்கையைப் பொறுத்தது. ஜாதகம் கணித்திருந்தாலும், குழந்தையின் உடல்நலம், கல்வி உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களின் ஆலோசனைக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம்.
Also Read: புற்றுநோய் சிகிச்சையில் முடியை இழப்போருக்கு இலவச இயற்கை முடி விக்… டாடா மெமோரியலின் புதிய முயற்சி!



