புற்றுநோய் சிகிச்சையால் முடியை இழக்கும் நோயாளிகளுக்கு, அந்தப் பாதிப்பு உடலோடு மட்டுமின்றி மனதளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக விலை உயர்ந்த இயற்கை முடி விக்குகளை வாங்க முடியாத ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் வகையில், இலவசமாக உயர்தர விக்குகளை வழங்கும் புதிய திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டாடா மெமோரியல் சென்டர் மற்றும் செரியன் ஃபவுண்டேஷன் இணைந்து மேற்கொள்ளும் இந்த முயற்சியின் மூலம், நாடு முழுவதும் உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கிய புற்றுநோயாளிகளுக்கு இயற்கையான மனித முடியால் தயாரிக்கப்பட்ட விக்குகள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக செரியன் ஃபவுண்டேஷன் தனது ‘Gift Hair – Gift Confidence’ (GHGC) திட்டத்தின் வாயிலாக 500 உயர்தர இயற்கை முடி விக்குகளை நன்கொடையாக வழங்குகிறது. இந்த விக்குகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளின் பக்கவிளைவாக முடி உதிர்தல் ஏற்படுவது பொதுவானது. சில நோயாளிகளுக்கு இந்த மாற்றம் அவர்களின் தோற்றம் குறித்த கவலையை அதிகரிப்பதுடன், தன்னம்பிக்கையையும் பாதிக்கக்கூடும். இந்தச் சூழலில், இயற்கை முடியால் உருவாக்கப்பட்ட விக்குகள் நோயாளிகளின் இயல்பான தோற்றத்தை மீண்டும் பெற உதவுவதுடன், சிகிச்சைக் காலத்தில் மனதளவில் உறுதியுடன் இருக்கவும் உதவக்கூடும்.
இத்தகைய விக்குகளை வாங்குவது பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு கூடுதல் செலவாக மாறுகிறது. மேலும், அவை பொதுவாக மருத்துவக் காப்பீட்டின் கீழ் வராததால், பலரால் அவற்றை வாங்க முடியாத நிலை உள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் கீழ், மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனை, டாடா மெமோரியல் சென்டர் குழுமத்தின் மருத்துவமனைகளுக்கான விக்குகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளும். தேவையான இடங்களுக்கு அவற்றை கொண்டு சேர்ப்பது மற்றும் விநியோகிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் ஒருங்கிணைக்கப்படும்.
மருத்துவச் செலவுகளுடன் போராடும் குடும்பங்களுக்கு, நோயாளியின் தோற்றம் மற்றும் தன்னம்பிக்கை தொடர்பான தேவைகளும் கூடுதல் சுமையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். சிகிச்சைக்கு அப்பால் நோயாளிகளின் உணர்வுபூர்வமான நலனையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் ஆதரவு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
Also Read: மோசடி வழக்கில் இஸ்லாமிய பேச்சாளர் அப்துல் பாசித்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!!



