அமெரிக்காவில் விசா விதிகள் கடுமையாக்கப்பட்டதன் எதிரொலியாக, நடப்பாண்டில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ‘காமன் ஆப்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘காமன் ஆப்’ என்பது அமெரிக்கா மற்றும் பிற 18 நாடுகளில் உள்ள 1,100-க்கும் மேற்பட்ட பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பாகும்.
கடந்த 2024-2025 கல்வி ஆண்டைக் காட்டிலும், 2025-2026 கல்வி ஆண்டில் அமெரிக்காவில் சேர விரும்பும் இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் 15% சரிந்துள்ளது. ஆசிய அளவில் ஒட்டுமொத்தமாக 11% குறைந்துள்ளது. ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் எஜுகேஷன்’ (IIE) தரவுகளின்படி, அமெரிக்காவிற்குப் படிப்பதற்காகச் செல்லும் சர்வதேச மாணவர்களில் இந்தியர்களே மிகப்பெரிய குழுவாக உள்ளனர்; 2024-2025 கல்வியாண்டில் 3,63,019 இந்திய மாணவர்கள் அங்கு பயின்றனர். அந்த ஆண்டில் மொத்த வெளிநாட்டு மாணவர்களில் இந்தியாவும் சீனாவும் இணைந்து 53% பங்களிப்பை அளித்தன.
இந்த மாதத் தொடக்கத்தில், ‘சென்டர் ஃபார் இமிகிரேஷன் ஸ்டடீஸ்’ (Centre for Immigration Studies) என்ற கொள்கை ஆய்வு அமைப்பின் தரவுகள் ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டன. அதன்படி, 2024-ல் இந்தியர்களுக்கு 58,694 மாணவர் விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில், 2025-ல் அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகள் 22,149 விசாக்களை மட்டுமே வழங்கியுள்ளனர்; இது 60%-க்கும் அதிகமான சரிவாகும்.
ஆப்பிரிக்காவிலிருந்து வந்த விண்ணப்பங்களில் 17% சரிவு ஏற்பட்டுள்ளதையும் இந்த அறிக்கை பதிவு செய்துள்ளது; குறிப்பாக கானாவிலிருந்து 34%, எத்தியோப்பியாவிலிருந்து 29% மற்றும் நைஜீரியாவிலிருந்து 21% விண்ணப்பங்கள் குறைந்துள்ளன. அமெரிக்காவிற்கு அதிக எண்ணிக்கையிலான சர்வதேச விண்ணப்பங்களை அனுப்பும் முதல் பத்து நாடுகளில், கென்யா மட்டுமே வளர்ச்சியைக் (விண்ணப்பங்களில் 29% அதிகரிப்பு) பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கை கடுமையாக்கப்படுதல், விசா விதிமுறைகளில் மாற்றங்கள் மற்றும் கல்விப் படிப்பை முடித்த பிறகு மாணவர்கள் அங்கு தங்குவதற்கான கால வரம்பை நான்கு ஆண்டுகளாகக் குறைத்தல் ஆகியவை இந்த ஆண்டு நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் அடங்கும்.
அமெரிக்காவில் மாணவர்கள் தங்குவதற்கான காலவரம்பை 4 ஆண்டுகளாக குறைப்பது, விசா விதிகளை இறுக்குவது போன்ற நிர்வாகத்தின் புதிய நடவடிக்கைகளே இந்த சரிவுக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகின்றன. மேலும், படிப்பிற்கு பின் வழங்கப்படும் ‘விரைவுப் பயிற்சித் திட்டத்திற்கு’ 1,00,000 டாலர் கட்டணம் வசூலிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ரூபாய் – டாலர் நாணய மாற்று மதிப்பு மாற்றங்கள் மற்றும் விசா சிக்கல்கள் காரணமாக அமெரிக்கக் கல்விக்கான ஒட்டுமொத்த செலவு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் படிக்கத் தயங்கும் மாணவர்களை ஈர்க்க பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நிபுணர்களின் கருத்துப்படி, ரூபாய்-டாலர் மாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வெளிநாட்டுக் கல்வியின் ஒட்டுமொத்தச் செலவை அதிகரித்துள்ளன. இருப்பினும், இந்தியாவில் சர்வதேசக் கல்வி நிறுவனங்களின் கிளை வளாகங்கள் அதிகரித்து வருவதால், மாணவர்கள் தங்கள் இளங்கலைப் படிப்பை இந்தியாவிலேயே முடித்துவிட்டு, பொருளாதாரச் சூழல் தெளிவடைந்த பிறகு முதுகலைப் படிப்பிற்காக அமெரிக்காவைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உருவாகலாம்.



