மத்திய பிரதேசத்தில் மருத்துவமனையில் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் இருந்த பை காணாமல் போனதாக எழுந்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, எதிர்பாராத திருப்பமாக நாய் ஒன்று அந்த பையை தூக்கிச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் பையை மருத்துவமனை வளாகத்திலேயே கண்டுபிடித்து, அதிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை பத்திரமாக மீட்டுள்ளனர்.
மந்த்சோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கயாம்பூர் பகுதியைச் சேர்ந்த லதாபாய் வால்மீகி என்பவரின் மகன் கை காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடன் இருந்த லதாபாய், தன்னிடம் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பணம் உள்ளிட்டவற்றை ஒரு பையில் வைத்திருந்தார்.
இந்நிலையில், அதிகாலை நேரத்தில் அந்தப் பை காணாமல் போனது. சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.2,000 பணம் அதில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து லதாபாய் போலீசாரிடம் புகார் அளித்தார். இதன் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார், மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, அதிகாலை சுமார் 4 மணியளவில் ஒரு தெருநாய் அறுவை சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைவது பதிவாகியிருந்தது. அந்த நாய் அங்கிருந்த பையை தனது வாயால் கவ்விக்கொண்டு மருத்துவமனை வளாகத்திற்குள் நடந்து செல்வதும் காட்சிகளில் தெரியவந்தது. இதனால் பையை திருடியது யார் என்ற கோணத்தில் தொடங்கிய விசாரணை, எதிர்பாராத விதமாக நாயை நோக்கி திரும்பியது.
இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல்வேறு சிசிடிவி கேமராக்களில் நாயின் நடமாட்டத்தை போலீசார் தொடர்ந்து கண்காணித்தனர். அதன் வழித்தடத்தை பின்தொடர்ந்தபோது, மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே ஒரு பகுதியில் அந்தப் பை கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பையை சோதனை செய்தபோது, அதில் இருந்த நகைகள் மற்றும் பணம் எதுவும் காணாமல் போகவில்லை என்பது தெரியவந்தது. பையில் உணவுப் பொருட்கள், குறிப்பாக பிஸ்கெட்டுகளும் இருந்ததால், உணவின் வாசனையால் ஈர்க்கப்பட்ட நாய் பையை தூக்கிச் சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் தேவையான சட்ட நடைமுறைகளை முடித்து, மீட்கப்பட்ட நகைகள் மற்றும் பணம் லதாபாயிடம் ஒப்படைக்கப்பட்டன. நகைகளை குறிவைத்து மனிதர் ஒருவர் திருடியிருக்கலாம் என போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் நாய் பையை எடுத்துச் சென்றது தெரியவந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: பெண்களே உஷார்! இந்த 5 விஷயங்களை யாரிடமும் சொல்லாதீங்க… சாணக்கியர் கூறிய முக்கிய அறிவுரை..



