கள்ளக்காதல் காரணமாக குடும்ப உறவுகள் சிதைந்து, பல நேரங்களில் மனிதர்கள் தங்களின் குடும்பம், பிள்ளைகள், எதிர்காலம் என அனைத்தையும் மறந்து விபரீத முடிவுகளை எடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ஹரியானாவில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்ததாக அவரது மனைவி மற்றும் அவரது காதலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் வசித்து வந்தவர் 42 வயதான சியாம்வீர் சிங். இவரது மனைவி கேசவ். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில், கேசவுக்கும் காமத் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமாகி, இருவருக்கும் இடையே காதல் உறவு ஏற்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனைவியின் நடவடிக்கை குறித்து அறிந்த சியாம்வீர், அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் கணவரை அகற்றிவிட்டு காமத்துடன் சேர்ந்து வாழலாம் என்ற முடிவுக்கு கேசவ் வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, திட்டமிட்டு சியாம்வீரை கொலை செய்ய இருவரும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலை, சியாம்வீருக்கு அதிக அளவில் மதுபானம் கொடுத்து குடிக்க வைத்துள்ளனர். அவர் போதையில் இருந்தபோது, அவரது தலையில் கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கொலைக்குப் பிறகு, சம்பவத்தை மறைக்கும் முயற்சியாக சியாம்வீரின் உடலை அவரது வீட்டுக்கு அருகிலேயே இருவரும் புதைத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், சியாம்வீரின் சகோதரர் அவரை தொடர்புகொள்ள முயன்றபோது அவர் குறித்து கேசவிடம் விசாரித்துள்ளார். ஆனால், கேசவ் முறையான பதில் அளிக்காததால் சந்தேகம் அடைந்த அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கிய நிலையில், சியாம்வீர் காணாமல் போனதன் பின்னணியில் இருந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்ததாக கேசவ் மற்றும் காமத் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: பள்ளி அனுமதிக்கு லஞ்சம் கொடுத்ததாக சர்ச்சை.. “நான் லஞ்சம் கொடுக்கவில்லை” என அமைச்சர் மரிய வில்சன் விளக்கம்!



