சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், பாக்கெட் பால் விற்பனையை தடுத்து தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்குமாறு தனியார் பால் நிறுவனங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மலைப்பிரதேசங்களில் பிளாஸ்டிக் தடையை முழுமையாக அமல்படுத்தக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு, பிளாஸ்டிக் கவர்களில் பால் விநியோகம் செய்வதற்கு மாற்றாக புதிய வழிகளைக் கண்டறிய அறிவுறுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஆவின் நிறுவனம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சோதனை அடிப்படையில் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்தது.
இந்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சோதனை முறையில் கொடைக்கானலில் முதல் இரு நாட்களில் 40 லிட்டர் பாலும், ஊட்டியில் வெறும் 6 லிட்டர் பாலும் மட்டுமே தானியங்கி இயந்திரங்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த புள்ளிவிவரங்களைக் கவனித்த நீதிபதிகள், புதிய தானியங்கி முறை குறித்து பொதுமக்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் போதிய விழிப்புணர்வும் விளம்பரமும் செய்யப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்தனர்.
தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதிகள், தானியங்கி இயந்திரங்கள் குறித்து விரிவான விளம்பரங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும், இந்த இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள பகுதிகளில் பாக்கெட் பால் விற்பனையை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், ஆவின் நிறுவனத்தை தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் மலை வாசஸ்தலங்களில் தங்களது சொந்த தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை நிறுவ வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.



