புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே அமைந்துள்ள குளமங்கலம் கிராமத்தில், வில்லுனி ஆற்றங்கரையில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோயில், ஆசியாவிலேயே மிக உயரமான குதிரைச் சிலை அமைந்துள்ள திருத்தலமாக உலகளவில் தனிப்பெரும் சிறப்பைப் பெற்றுள்ளது.
சுமார் 1574-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறும் இந்த ஆலயத்தில் சுமார் 33 முதல் 35 அடி உயரத்தில் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட குதிரை சிலை பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த குதிரைச் சிலைக்கு இணையாக அதே உயரத்தில் ஒரு பிரம்மாண்ட யானைச் சிலையும் இங்கு இருந்ததாகவும், வில்லுனி ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் அந்த யானைச் சிலை அடித்துச் செல்லப்பட்டதாகவும் செவிவழி வரலாறுகள் கூறுகின்றன.
அதன் பின்னர் புதுப்பிக்கப்பட்ட இக்குதிரை சிலைக்கு, எவ்வித ரசாயனக் கலப்புமின்றி பாரம்பரிய முறைப்படி இயற்கை மூலிகைப் பொருட்களால் மட்டுமே வர்ணம் பூசப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பக்தர்களின் பங்களிப்புடன் ஆலயக் கருவறை கோபுரத்தில் தங்கக் கலசமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மாசி மாத மகம் நட்சத்திரத்தன்று நடைபெறும் இரண்டு நாள் ‘மாசி மகத் திருவிழா’ இக்கோயிலின் உச்சக்கட்ட ஆன்மீகத் திருநாளாகும். இவ்விழாவின்போது, 35 அடி உயர குதிரைச் சிலைக்கு பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறியதற்காக ஆயிரக்கணக்கான காகிதப்பூ மாலைகளைக் காணிக்கையாகச் செலுத்தி, அதன் கழுத்து வரை அலங்கரிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இரண்டாம் நாளில் விமரிசையாக நடைபெறும் தெப்ப உற்சவத்தைக் காணத் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் லட்சக்கணக்கில் குளமங்கலத்தில் குவிவது வழக்கம்.
இத்திருவிழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு, கிராம மக்கள் தங்கள் வீடுகளிலேயே பாரம்பரிய உணவுகளைச் சமைத்து எடுத்துவந்து அன்னதானமாக வழங்கி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். திருவிழா காலங்களில் அறந்தாங்கி மற்றும் கீரமங்கலம் ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
Read More : தமிழ்நாடு ஆளுநர் மாற்றம்? முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவரா? யார் இந்த கிருஷ்ணகுமார் ரெட்டி?



