ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தப்பட்டு, இனி ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.44 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
பால் உற்பத்திக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, கறவை மாடுகளுக்கான பசுந்தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களின் விலை உயர்ந்துள்ளதால், பால் உற்பத்தியாளர்களின் செலவுச் சுமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, ஏற்கனவே உயர்த்தப்பட்டிருந்த கொள்முதல் விலையை அரசு மீண்டும் அதிகரித்துள்ளது. முன்னதாக ஒரு லிட்டர் ரூ.38-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் தொகையில் ரூ.1 உயர்வும், அரசு ஊக்கத்தொகை ரூ.3-ல் இருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டதன் மூலமும் விலை ரூ.41 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், உற்பத்தியாளர்களின் கோரிக்கையை மேலும் பரிசீலித்த தமிழக அரசு, தற்போது கூடுதலாக ரூ.3 உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.44 ஆக அதிகரித்துள்ளது.
இந்த முடிவின் மூலம் கிராம அளவில் செயல்படும் தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கி வரும் 3 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. பால் உற்பத்தி மூலம் கிராமப்புற பொருளாதாரம் வலுப்பெறுவதையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதிய கொள்முதல் விலை உயர்வால் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்படும் கூடுதல் நிதிச்சுமையை தமிழக அரசே ஏற்கும். இதற்காக மாதத்திற்கு சுமார் ரூ.60 கோடியும், ஆண்டுக்கு ரூ.720 கோடியும் கூடுதல் செலவாகும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: மாதம் சம்பளம் வந்ததும் பணம் எங்கே போகுதுனே தெரியலையா?… இந்த 3 செலவுகளை முதலில் கவனிங்க!



