கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் முடலகி தாலுகாவில் உள்ள இரும்புத் தொழிற்சாலை ஒன்றில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சீதாராம் மற்றும் அருண்குமார் ஆகிய இரு நண்பர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர். வாராந்திர விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, இருவரும் தங்களது அறையில் மது அருந்திக்கொண்டே சிக்கன் சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
அப்போது, தன்னை விட சீதாராம் அதிக அளவில் சிக்கன் துண்டுகளை சாப்பிட்டதாக கூறி அருண்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மதுபோதையில் இருந்த இருவருக்கும் இடையே “யார் அதிக சிக்கன் சாப்பிடுவது” என்ற தகராறு முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அருண்குமார் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து சீதாராமின் நெஞ்சில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சீதாராம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். நண்பன் இறந்துவிட்டதை உணர்ந்த அருண்குமார், கொலையை விபத்தாக மறைக்க திட்டமிட்டு சீதாராமின் உடலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம், “வெல்டிங் வேலை செய்யும்போது கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து அடிபட்டுவிட்டார்” என கூறி நாடகமாடியுள்ளார்.
ஆனால், சீதாராமின் நெஞ்சில் இருந்த ஆழமான கத்திக் குத்து காயத்தைப் பார்த்துச் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக கடாபிரபா போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அருண்குமாரை பிடித்துக் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், சிக்கன் துண்டு தகராறில் நண்பனை கத்தியால் குத்திக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அருண்குமாரை கைது செய்த காவல்துறையினர், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : துடிப்போடு கபடி விளையாடிய பள்ளி மாணவன்..! திடீரென சுருண்டு விழுந்து மரணம்..! வாணியம்பாடியில் சோகம்..!



