2029 மக்களவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என்று தவெக மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக விஜய் ஆதரிப்பார் என்ற காங்கிரஸின் கூற்றை தவெக நிராகரித்துள்ளது.
டெல்லி தீர்மானிக்காது; தமிழகமே தீர்மானிக்கும்: இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க சென்ற தவெக எம்.எல்.ஏ. கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிரதமர் பதவி குறித்த முடிவை டெல்லி தீர்மானிக்க முடியாது என்றும் தமிழகமே தீர்மானிக்கும் என்றும் கூறினார். மேலும், 2029-ல் விஜய்தான் பிரதமர் வேட்பாளர். யார் பிரதமர் என்பதை டெல்லி முடிவு செய்ய முடியாது; தமிழகம்தான் முடிவு செய்யும். 2029-ல் ஏதோ ஒரு மேஜிக் நடக்கும். ராகுல் காந்தியே விஜய்யை நாட்டின் பிரதமராக்குவார் என்றார்.
காங்கிரஸ் தரப்பின் நிலைப்பாடு: கூட்டணிக்குள் எந்த தலைமைப் போட்டியும் இல்லை என்று கூறிய காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் தாரகை கத்பர்ட், விஜய்யை பிரதமர் வேட்பாளராக சித்ரிப்பது தொண்டர்களின் ஆர்வ மிகுதியால் எழுவது மட்டுமே தவிர, அது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்றார். மேலும், முதலமைச்சர் விஜய் ஏற்கனவே ராகுல் காந்தியைத்தான் பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளார். அதை நோக்கியே அவர் செயல்பட்டு வருகிறார் என்றும் கத்பர்ட் கூறினார்.
கூட்டணி உறவில் விரிசல்? பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் தவெக – காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு வலுத்து வருகிறது. இந்தநிலையில், சமீபத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார் கன்னியாகுமரியில் பேசுகையில், 2029 தேர்தலில் தவேக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால், தவெக அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என எச்சரித்திருந்தார்.
முன்னதாக, தவெக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நாட்டின் உயரிய அரசியலமைப்புப் பதவிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவரே வர வேண்டும் எனப் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தற்போது 2029 மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் கூட்டணிக்குள் இழுபறி அதிகரித்துள்ளது.



