வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் வெளிநாட்டு வகை விலங்குகள் மற்றும் பறவைகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என மாநில வனத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்மைக்காலமாக மக்காவ், பஞ்சவர்ணக் கிளி போன்ற அரிய வகை பறவைகள் மற்றும் லீமர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வனவிலங்குகளை வீடுகளில் வளர்ப்பதும், வணிக ரீதியாக விற்பனை செய்வதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இவற்றை தங்களின் வீடுகளில் வளர்த்து வரும் உரிமையாளர்களும், விற்பனை செய்யும் வியாபாரிகளும் தங்கள் வசம் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த முழு விவரங்களை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, வெளிநாட்டு விலங்குகள் மற்றும் பறவைகளை வளர்ப்பவர்கள், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான ‘பரிவேஷ் 2.0’ (Parivesh 2.0) என்ற தளத்தில் தங்களின் விவரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து புதிதாக விலங்குகள் மற்றும் பறவைகளை இறக்குமதி செய்ய விரும்பினால், அதற்கு மாநில முதன்மை வனவிலங்கு காப்பாளரிடம் (Chief Wildlife Warden) முறையான தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறி அனுமதியின்றி வெளிநாட்டுப் பிராணிகளை வீடுகளில் வளர்த்தாலோ அல்லது சட்டவிரோதமாக விற்பனை செய்தாலோ, சம்பந்தப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என்றும், விதிகளை மீறுவோர் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை எச்சரித்துள்ளது.



