கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறை நிலச்சரிவைத் தொடர்ந்து நேபாளத்தில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 5,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. இந்தத் துயரத்தின் சுவடுகள் இன்னும் மாறாத நிலையில், தார்ச்சுலா (Darchula) மாவட்டத்தில் ஏற்பட்ட புதிய நிலச்சரிவால் மீண்டும் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
தார்ச்சுலா மாவட்டத்தின் அபி ஹிமால் பகுதியில் உள்ள பட்டார் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அதிக அளவிலான மண் மற்றும் இடிபாடுகள் சரிந்து விழுந்து சௌலானி நதியின் (சமேலியா நதி) ஓட்டத்தைத் தற்காலிகமாகப் பகுதியளவில் முடக்கியுள்ளன.
நிலச்சரிவு தொடர்ந்தால் நதி முற்றிலும் அடைக்கப்பட்டு, பின் அது உடைப்பெடுக்கும் போது கரையோரப் பகுதிகளில் ஆபத்தான திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
நதிக்கரையில் வாழும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆயுதமேந்திய காவல் படையினர் மற்றும் பலன்ச் பகுதியில் அமைந்துள்ள சமேலியா நீர்மின் நிலையப் பாதுகாப்புத் தளத்தைச் சேர்ந்த வீரர்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நேபாளக் காவல் துறையின் அதிகாரப்பூர்வத் தகவலின்படி, ஆகஸ்ட் 26 பேரழிவில் இதுவரை 1,344 பேரின் உடல்கள் (மற்றும் 501 துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள்) கண்டெடுக்கப்பட்டுள்ளன. காணாமல் போன 4,898 பேரைக் கண்டறியும் பணியில் நேபாள ராணுவத் தலைமையிலான கூட்டுக் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



