நேபாள நாட்டின் போட்டேகோஷி ஆற்றுப்படுகையில் உருவான திடீர் கோர வெள்ளத்திற்கு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பனிச்சரிவே முதன்மை காரணமாக இருக்கலாம் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார்.
Nepal Floods | போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம் அப்பகுதியிலிருந்த பல்வேறு கிராமங்களை வாரிச்சுருட்டி அடித்துச் சென்றுள்ளதுடன், சியாப்ருபெசி உள்ளிட்ட முக்கிய பகுதிகளை கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் மாயமானவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ இறுதி விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகாத போதிலும், 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வெள்ளப் பாதிப்பு குறித்து நேபாள உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் ஷிசிர் கனால், தொடக்கக்கட்ட ஆய்வு அறிக்கைகளின்படி நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உருவான மிகப்பெரிய பனிச்சரிவே இந்த அசாதாரண வெள்ளப்பெருக்குக்கு வழிவகுத்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினரால் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



