இந்திய இரயில்வேயின் 60 நாட்கள் முன்பதிவு விதிமுறைகளின்படி, 2026 தீபாவளி பண்டிகைக்கான (நவம்பர் 8) இரயில் பயணச் சீட்டு முன்பதிவு இன்று (செப்டம்பர் 6 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. தினமும் காலை 8:00 மணிக்கு IRCTC இணையதளம் மற்றும் இரயில் நிலைய முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். பண்டிகைக் காலத்தில் அதிக அளவில் பயணிகள் பயணிப்பார்கள் என்பதால், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யுமாறு இரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பண்டிகைக் காலத்தின் முக்கிய நாட்களான நவம்பர் 5 ஆம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு செப்டம்பர் 6 இன்றும், நவம்பர் 6 ஆம் தேதி பயணிக்க செப்டம்பர் 7 அன்றும் முன்பதிவு செய்ய வேண்டும்.
தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 7 ஆம் தேதி பயணிப்பதற்கு செப்டம்பர் 8 அன்றும், தீபாவளி பண்டிகை நாளான நவம்பர் 8 ஆம் தேதி பயணிப்பதற்கு செப்டம்பர் 9 அன்றும் முன்பதிவு தொடங்குகிறது. மேலும், நவம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் பயணிப்பதற்கான முன்பதிவுகள் முறையே செப்டம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் தொடங்கும்.
பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும் வசதியான பயணத்தை உறுதி செய்யவும் இந்திய இரயில்வே பல்வேறு சிறப்பு இரயில்களையும் அறிவித்துள்ளது.மேலும், பயணிகள் IRCTC கணக்கில் ‘Master List’ மூலம் பயணிகளின் விவரங்களை முன்னரே சேமித்து வைப்பதன் மூலமும், UPI அல்லது e-Wallet போன்ற வேகமான கட்டண முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் காலை 8:00 மணிக்குத் தொடங்கும் முன்பதிவில் விரைவாக டிக்கெட்டுகளை உறுதி செய்ய முடியும்.
பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், செல்போன் செயலி மற்றும் ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்கள் மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என்பதால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர அதிக வாய்ப்பு உள்ளது.



