ஜம்மு காஷ்மீர் பட்காம் மாவட்டம் யூஸ்மார்க் உயரமான மலைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி யாசிர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
யூஸ்மார்க் மலைப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த துல்லியமான உளவுத்துறை தகவலை அடுத்து இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் படையினர் இணைந்து அப்பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், பாதுகாப்பு படையினர் கொடுத்த அதிரடி பதிலடியில் யாசிர் உயிரிழந்தார். அவருடன் இருந்த மற்றொரு பயங்கரவாதி அடர்ந்த காட்டுக்குள் தப்பி ஓடியதால், அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட யாசிர், கடந்த 2024 மே மாதம் பூஞ்ச் சுரான்கோட் பகுதியில் இந்திய விமானப்படை வாகன அணிவகுப்பு மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியாவான். அந்த தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். அதுமட்டுமின்றி சோனமார்க், போடா பத்ரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களிலும் யாசிருக்கு நேரடி தொடர்பு இருந்துள்ளது. ஜுனைத் அகமது பட் தலைமையிலான லஷ்கர் குழுவில் செயல்பட்டு வந்த யாசிர் கொல்லப்பட்டதன் மூலம், காஷ்மீரில் பயங்கரவாத வலையமைப்பிற்கு பாதுகாப்பு படையினர் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளனர்.



