சென்னையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த கொலை சம்பவம் நகரின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வியை எழுப்பியுள்ளது. அடையாறு வண்ணாந்துறை பகுதியில் தவெக நிர்வாகி கண்ணன் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கண்ணனை இருசக்கர வாகனங்களில் வந்த சிலர் திடீரென சுற்றிவளைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கண்ணன் ஓடியபோதும், அந்த கும்பல் விடாமல் பின்தொடர்ந்துள்ளது. சிறிது தூரம் விரட்டிச் சென்ற பிறகு அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். பலத்த காயங்களுடன் சாலையில் சரிந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் போலீஸ் விசாரணையில் முக்கிய ஆதாரமாக உள்ளன.
தகவல் கிடைத்ததும் சாஸ்திரி நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று தடயங்களை சேகரித்தனர். உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் பயன்படுத்திய வாகனங்கள், அவர்கள் வந்த பாதை, சம்பவத்திற்கு முன்பு கண்ணனை பின்தொடர்ந்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த வழக்கில் மூன்று தனிப்படைகளை அமைத்து போலீஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். சிசிடிவி பதிவுகள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 5 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கண்ணனின் கடந்தகால நடவடிக்கைகளும் விசாரணையின் முக்கிய பகுதியாக மாறியுள்ளன. முன்னதாக அதிமுகவில் வட்டப் பிரதிநிதியாக இருந்த அவர், சமீபத்தில் தவெகவில் இணைந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அதே நேரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். அவருக்கு எதிராக பழைய வழக்குகள் இருந்த பின்னணியையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு அடையாறு பகுதியில் நடந்த கொலை வழக்குடன் தொடர்புடைய பழைய விரோதம் ஏதேனும் இருந்ததா என்பதையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொடர்பான பணப்பிரச்சினை அல்லது தொழில் போட்டி காரணமாக தாக்குதல் நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
இதற்கிடையில், பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை அரசியல் சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது. சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக கேள்விகளை எழுப்பியுள்ளன. குறிப்பாக ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்வைத்து அரசை விமர்சிக்கும் அரசியல் தலைவர்கள், தலைநகரில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
காவல்துறை நடவடிக்கை மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவாதங்கள் சட்டப்பேரவையிலும் முக்கிய இடம் பெற உள்ள நிலையில், அடையாறு கொலை சம்பவம் அரசியல் ரீதியாகவும் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
Also Read: பேராபத்தில் பூமி! 1.5°C வெப்பநிலை வரம்பை நெருங்கும் உலகம்… மீண்டும் சரிசெய்ய முடியாத பேரழிவுகள் குறித்து ஐ.நா. எச்சரிக்கை!



