கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரில் பர்னிச்சர் கடை நடத்தி வந்த 53 வயது நபர், வேலைக்கு வந்த கல்லூரி மாணவியை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீற முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையில், கடையில் ஏற்கனவே பணியாற்றிய 4 பெண்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி, அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
திங்கள் நகரில் ‘அன்னை வேளாங்கன்னி எண்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் மண்டைக்காடு பாரதி நகரைச் சேர்ந்த ரிக்சன் மனோ ஜோஸ். இவரது கடையில் பணியாற்றுவதற்காக அம்மாண்டிவிளையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி சேர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியான வேலைவாய்ப்பு விளம்பரத்தை பார்த்து அவர் இந்தப் பணியில் இணைந்துள்ளார்.
செப்டம்பர் 2-ம் தேதி வழக்கம்போல் மாணவி கடைக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது மதிய நேரத்தில் கண்களில் சொட்டு மருந்து விட வேண்டும் என ரிக்சன் மனோ ஜோஸ் கூறியுள்ளார். இதற்காக கடையின் உள்பகுதியில் இருந்த அறைக்கு மாணவியை அழைத்துச் சென்று கதவை மூடியுள்ளார்.
அறைக்குள் செல்போனில் சில வீடியோக்களை மாணவியிடம் காட்டிய அவர், தனக்கு மசாஜ் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். மாணவி மறுத்ததால் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் எழுப்பியபடி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
வீட்டுக்குச் சென்ற மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் பெற்றோரின் அறிவுறுத்தலின்படி இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் ரிக்சன் மனோ ஜோஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரது செல்போனையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கடையில் பணியாற்றிய பெண்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக அவர் மீது மேலும் புகார்கள் இருப்பது போலீசாரின் கவனத்திற்கு வந்தது. தனது விருப்பத்திற்கு இணங்கும் பெண்களுக்கு கூடுதல் சம்பளம் தருவதாக ஆசை காட்டியதுடன், குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பணிக்கு வருமாறு சில பெண்களிடம் கூறியதும் விசாரணையில் தெரியவந்தது.
இளம் பெண்களை வேலைக்கு தேர்வு செய்வதற்காக இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்தக் கடையில் முன்பு பணியாற்றிய 4 பெண்களை போலீசார் அழைத்து விசாரித்தனர். அவர்களும் ரிக்சன் மனோ ஜோஸ் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், தங்களின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி தவறான அணுகுமுறையை மேற்கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர். அந்த வாக்குமூலங்களை போலீசார் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ரிக்சன் மனோ ஜோஸை இரணியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி அவர் நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்ஸ்டாகிராம் வேலைவாய்ப்பு விளம்பரம் மூலம் பணியில் சேர்ந்த கல்லூரி மாணவி அளித்த புகாரில் பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையின் அடுத்த கட்டத்தில் முன்னாள் பெண் ஊழியர்களும் புகார் அளித்திருப்பது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: “அண்ணி மீது ஆசை”.. அண்ணன் ஊரில் இல்லாத நேரத்தில் நடந்த சம்பவம்! ஆத்திரத்தில் தம்பி செய்த கொடூரம்!



