தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள சூழலில், ஆளும் தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. நாம் தமிழர் தவிர மற்ற 3 கட்சிகளும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளன.
குறிப்பாக, கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் தவெக-வில் ஐக்கியமான முன்னாள் எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்யபாமா (தாராபுரம்) ஆகியோரே மீண்டும் அதே தொகுதிகளில் ஆளும் தவெக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்த்து திமுக சார்பில் மதுராந்தகத்தில் ஐ.பரந்தாமனும், தாராபுரத்தில் எஸ்.சுகன்யாவும் நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் அதிமுக தரப்பில் மதுராந்தகத்தில் கணிகா சம்பத்தும், தாராபுரத்தில் பானுமதியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
வரலாற்று ரீதியாக இவ்விரு தொகுதிகளும் அதிமுக மற்றும் திமுகவுக்கு கணிசமான செல்வாக்கு உள்ள பகுதிகளாகும். மதுராந்தகத்தில் அதிமுக 7 முறையும், திமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2026 பொதுத்தேர்தலில் இங்கு அதிமுகவின் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், தவெக 62,090 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும், திமுக 59,838 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தன. அதேபோல் தாராபுரம் தொகுதியில் திமுக, அதிமுக தலா 6 முறை சம பலத்துடன் வென்றுள்ள நிலையில், கடந்த தேர்தலில் அதிமுகவின் சத்யபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவின் இந்திராணி 64,373 வாக்குகளும், தவெக 46,438 வாக்குகளும் பெற்றிருந்தன.
பொதுவாக ஆளும் கட்சியின் செயல்பாடுகளை மதிப்பிடும் அளவுகோலாகவே இடைத்தேர்தல்கள் பார்க்கப்படும். தற்போது 107 சட்டமன்ற உறுப்பினர்களுடன் கூட்டணி கட்சிகளின் பலத்தோடு ஆட்சி அமைத்துள்ள தவெக அரசுக்கு, தனிப்பெரும்பான்மையை எட்டுவதற்கு மேலும் இடங்கள் அவசியமாக உள்ளன. இந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஆளும் கட்சியின் சட்டமன்ற பலம் மேலும் கூடி அரசுக்கு இருக்கும் நெருக்கடிகள் பெருமளவு குறையும்.
கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தவெக, இம்முறை காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் உள்ளிட்ட வலுவான தோழமைக் கட்சிகளின் வாக்கு வங்கியுடன் களம் காண்கிறது. மேலும், ஆளும் கட்சியின் 4 மாத கால நிர்வாக நடைமுறைகளும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கமும் களத்தில் கூடுதல் சாதகத்தை உருவாக்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர். அதேநேரம், முதல்வர் விஜய் நேரடியாக இவ்விரு தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் பட்சத்தில், தேர்தல் களம் ஆளும் தரப்பிற்கு கூடுதல் உத்வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : மீண்டும் ஓர் பேரதிர்ச்சி.. நேபாள வெள்ளத்துக்கு அடுத்து திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!



