மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தனியார் துறை மாதச் சம்பளதாரர்களுக்குப் பயனளிக்கும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) திட்டத்திற்கான மாதாந்திர ஊதிய உச்சவரம்பை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.
இதுதொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிஎஃப் சேமிப்புத் திட்டத்தில் இணைவதற்கான தற்போதைய மாதாந்திர ஊதிய உச்சவரம்பு ரூ.15,000-லிருந்து ரூ.25,000-ஆக உயர்த்தப்படுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவின் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 51 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் நேரடியாகப் பயனடைவார்கள். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசுக்குத் தோராயமாக ரூ.11,339 கோடி கூடுதல் செலவு ஏற்படும்” என்று தெரிவித்தார்.
ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்படுவதன் மூலம், இதுவரை பிஎஃப் திட்ட வரம்பிற்குள் வராத லட்சக்கணக்கான புதிய தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியப் பலன்களைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Read More : தவெக பதவிக்கு ரூ.15 லட்சம் பேரம்? ரூ.5 லட்சமாக குறைந்த தொகை.. வெளியான ஆடியோவால் பரபரப்பு!



