மூடநம்பிக்கைகள் என்றாலே இந்தியாவில் மட்டுமே அதிகம் இருப்பதாகப் பலர் நினைக்கக்கூடும்; ஆனால் உண்மையில் உலகம் முழுவதுமே பல்வேறு விசித்திரமான மூடநம்பிக்கைகளும் கட்டுப்பாடுகளும் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் இன்றும் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த நவீன யுகத்திலும் கூட, உலக மக்கள் தீவிரமாக நம்பிப் பின்பற்றி வரும் சில விநோத நம்பிக்கைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இரவில் சூயிங்கம் மென்றால் சடலத்தை உண்பதற்குச் சமம் :
துருக்கி நாட்டில் இரவில் சூயிங்கம் மெல்லும் பழக்கத்திற்குத் தடை போன்ற ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இரவு வேளையில் சூயிங்கம் மென்றால், அது இறந்த மனித உடலின் சதை அல்லது சடலத்தை உண்பதற்குச் சமமானது என அந்நாட்டு மக்கள் அஞ்சுகின்றனர்.
ஆட்டிறைச்சி சாப்பிட்டால் பெண்களுக்குத் தாடி முளைக்கும் :
ருவாண்டா நாட்டில் பெண்கள் ஆட்டிறைச்சி உட்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆட்டிறைச்சி சாப்பிட்டால் அவர்களுக்கு ஆண்களைப் போல முகத்தில் தாடி முளைத்துவிடும் என்ற விசித்திரமான பயமே இதற்குப் பிரதானக் காரணமாகக் கூறப்படுகிறது.
சனிக்கிழமைகளில் முடி வெட்டினால் சனி பகவான் கோபம் :
சனிக்கிழமைதோறும் முடி அல்லது நகங்களை வெட்டக்கூடாது என்ற வழக்கம் இந்து மதத்தில் பரவலாக உள்ளது. சனிக்கிழமையில் தலைமுடியை வெட்டினால் அது சனி பகவானின் நேரடிக் கோபத்திற்கு ஆளாக்கி, வாழ்க்கையில் துன்பங்களைத் தரும் என மக்கள் நம்புகின்றனர்.
கெட்ட சக்திகளை விரட்டும் குதிரை லாடம்:
படுக்கையறை அல்லது வீட்டின் தலைவாசல் சுவர்களில் குதிரை லாடத்தின் முனைகள் மேல்நோக்கி இருக்கும்படி மாட்டி வைத்தால் கெட்ட சக்திகள் அண்டாது என்ற நம்பிக்கை பல மேற்கத்திய நாடுகளில் உள்ளது. இரும்பினால் செய்யப்பட்ட குதிரை லாடத்தில் உள்ள 7 துளைகள் அதிர்ஷ்டத்தைக் கொண்டுவந்து நல்ல நிம்மதியான தூக்கத்தைத் தரும் எனக் கருதப்படுகிறது.
நள்ளிரவில் 12 திராட்சைகள் சாப்பிட்டால் அதிர்ஷ்டம் :
புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு வாழ்த்துகளைப் பரிமாறுவதற்குப் பதிலாக, தொடர்ந்து 12 திராட்சைப் பழங்களைச் சாப்பிடுவது ஸ்பெயின் நாட்டின் வழக்கம். ஆண்டின் 12 மாதங்களையும் குறிக்கும் இந்த 12 திராட்சைகளை உண்டால், அந்த ஆண்டு முழுவதும் செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் கொட்டும் என்பது அவர்களின் நம்பிக்கை.
ஆண்மை குறைவை ஏற்படுத்தும் லெட்யூஸ் கீரை:
ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த லெட்யூஸ் கீரையைத் திருமணமான ஆண்கள் சாப்பிடக் கூடாது என்ற ஒரு கட்டுக்கதை சில பகுதிகளில் நிலவுகிறது. இதனைச் சாப்பிட்டால் ஆண்களின் வீரியம் குறைந்து குழந்தையின்மைப் பிரச்சனை ஏற்படும் எனத் தவறாக நம்புகின்றனர்.
பறவையின் எச்சம் விழுந்தால் பணக்கார யோகம் :
வானில் பறக்கும் பறவையின் எச்சம் தவறுதலாக ஒருவரின் தலையிலோ உடலிலோ விழுந்தால் ரஷ்யாவில் அது மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. அவ்வாறு எச்சம் விழுந்த நபர் விரைவில் அபரிமிதமான செல்வத்தைப் பெற்றுப் பெரும் பணக்காரர் ஆவார் என்பது ரஷ்யர்களின் நம்பிக்கை.
மணப்பெண்ணின் முகத்திரை :
திருமணத்தின் போது மணப்பெண்ணின் முகத்தை மெல்லிய திரையால் மூடும் வழக்கம், தீய சக்திகள் மற்றும் பொறாமைப் பார்வைகள் மணப்பெண்ணைத் தாக்காமல் பாதுகாக்கும் என்ற பண்டைய ரோமானிய நம்பிக்கையில் இருந்தே உருவானதாக கூறப்படுகிறது.
மரணத்தின் எச்சரிக்கையாக பார்க்கப்படும் பறவை :
ஐரோப்பா மற்றும் ஆசியப் பகுதிகளில் காணப்படும் ‘Wryneck’ என்ற மரங்கொத்தி வகைப் பறவை, தனது தலையை முழுமையாகத் திருப்பும் அரிய தன்மையைக் கொண்டது. இந்தப் பறவை ஒருவர் எதிரே வந்து தனது தலையைத் திருப்பினால், அது குறிப்பிட்ட நபரின் குடும்பத்திற்கு வரவிருக்கும் மரணத்தின் அறிகுறி என்ற பயம் அங்கே நிலவுகிறது.
வீட்டிற்குள் விசில் அடித்தால் தீய சக்தி வரும் :
லிதுவேனியா நாட்டில் வீட்டின் உள்ளே இருக்கும்போது விசில் அடிக்கக் கூடாது என்ற கடுமையான வழக்கம் உள்ளது. அவ்வாறு விசில் அடித்தால் அது அரக்கர்களையும் தீய சக்திகளையும் வீட்டிற்குள் வலிய அழைப்பதற்குச் சமமான தீய செயலாக கருதப்படுகிறது.



