டாஸ்மாக் நிறுவனங்களில் நடைபெற்றுள்ள ரூ.1000 கோடி முறைகேட்டை கண்டித்து மார்ச் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதுபான விநியோக நிறுவனங்களில் நடைபெறும் அமலாக்கத் துறை சோதனையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப முதல்வர் ஸ்டாலின் முயற்சித்து வருகிறார். தற்போது கணக்கில் வராத ரூ.1000 கோடி பணம் லஞ்சமாகப்பெறப்பட்டதாக, மதுபான ஆலைகளில் இருந்து தொடர்புடைய ஆவணங்களை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை முதல்வருக்கு உள்ளது.
மேலும், முதல்வர் பதவியில் தொடர தனக்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்றும் அவர் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும். திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள் பணம் சம்பாதிப்பதற்காக நடத்தப்படும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள ரூ.1000 கோடி ஊழல், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. திமுகவின் இந்த மெகா ஊழலை கண்டித்து மார்ச் 17-ம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை தாளமுத்து நடராசன் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.