பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனை அருகே உள்ள இந்திராநகரில் வசித்து வருகிறார் கணேசன். இவருடைய மகன் ரோகித்ராஜ் (14) இவர் அருகில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் தன்னுடைய சகோதரர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சீனிவாசன் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் அந்த பகுதிக்கு மது போதையில் வந்திருந்தார்கள்.
அவர்கள் ரோகித்ராஜை இந்திரா நகர் அங்காளம்மன் கோவில் பகுதிக்கு செல்லும் சாலையில் இருக்கின்ற பொதுக்கழுப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இத்தகைய நிலையில், மது பாட்டிலை உடைத்து சிறுவன் ரோஹித் ராஜின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனால் அலறி துடித்த சிறுவன் அங்கிருந்து ரத்த காயங்களுடன் வெளியே ஓடி வந்து நடுரோட்டில் துடிதுடித்து விழுந்து உயிரிழந்துள்ளான். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள், பெரம்பலூர் நகர காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த சிறுவனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதோடு சிறுவனை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற சீனிவாசன் மற்றும் அவருடைய நண்பர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றன. காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் சீனிவாசன் 20 வயதான இளைஞர் என்று தெரிய வந்திருக்கிறது. அத்துடன் கஞ்சா போன்ற போதை பழக்கங்களில் அவர் ஈடுபாடு கொண்டவர் என்றும் சொல்லப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், கொலை நடைபெற்ற போது சீனிவாசன் மற்றும் அவருடைய நண்பர்கள் உள்ளிட்டோர் மது போதையில் இருந்ததாக சொல்லப்படுகின்றது.
இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்யாமிளா தேவி அது தொடர்பான விவரங்களை சேகரித்தார்.