தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. எனினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் தேவை..
இதனிடையே அதிமுக எம்.எல்.ஏக்களிடம் தவெக குதிரை பேரம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.. விலை போவதை தடுக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. மறுபுறம் திமுக – அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப் போவதாக ஒரு தகவல் வேகமாக பரவியது.. எனினும் அது வெறும் வதந்தி என்பது தெரியவந்தது..
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவரிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் ” அதிமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இபிஎஸ்-ன் பேச்சுக்கு கட்டுப்பட்டவர்கள்.. அதனால் எந்த பிரச்சனைகளும் இல்லை.. அதிமுக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கிவிடுவார்கள் என்பது வதந்தி.. எந்த பேரத்திற்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் விலை போக மாட்டார்கள்.. அதிமுக எம்.எல்.ஏக்கள் எங்கும் தங்க வைக்கப்படவில்லை..” என்று தெரிவித்தார்..
திமுக – அதிமுக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் ” எந்த முடிவாக இருந்தாலும் இபிஎஸ் எடுப்பார்.. அவர் நல்ல முடிவாக தீர்க்கமான முடிவாக எடுப்பார்.. அவர் எடுக்கும் முடிவு தான் கடைசியில் நிற்கும்.. அவர் எடுக்கும் முடிவு தான் நல்லதாக இருக்கும்.. இபிஎஸ் கிங் மேக்கர் இல்ல, அவர் தான் கிங்.. சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தொகுதிகள் குறைந்தாலும், வாக்கு சதவீதம் குறையவில்லை.. ” என்று தெரிவித்துள்ளார்..



