இன்றைய சமூகத்தில் பல குடும்பங்கள் சீர்குலைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கள்ளக்காதல் பார்க்கப்படுகிறது. இதன் பாதிப்பு கணவன், மனைவி மட்டுமின்றி, எந்தத் தவறும் செய்யாத குழந்தைகளின் வாழ்க்கையையும் கடுமையாக பாதிக்கிறது. குறிப்பாக, கள்ளக்காதல் தொடர்பான தகராறுகள் மற்றும் மோதல்களால் அப்பாவி குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூலகிரி தாலுகா, தேவதாசனபள்ளியை சேர்ந்தவர் 35 வயதான ரமேஷ். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் இவருக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போயனபள்ளியை சேர்ந்த 30 வயதான ஹாசினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதான மவுனிகா என்ற மகள் உள்ளார். இந்த தம்பதி தங்களின் குழந்தையுடன் ஓசூரில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 13ம்தேதி ஹாசினி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் தனது தாய் ருக்கம்மா வீட்டுக்கு வந்துள்ளார். மேலும், 14ம்தேதி மதியம், 3 பேரும் சேர்ந்து மல்லப்பா மலையில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் 3 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஹாசினியின் தாய் ருக்கம்மா, இது குறித்து ரல்லபுதுகுரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, மலைகோயில் அருகே ரமேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஹாசினியும் போயனபள்ளியை சேர்ந்த யுகேந்தரும் சிறுவயது முதலே பழகி வந்துள்ளனர். இவர்களின் பழக்கம் காதலாக மாறியுள்ளது.
இந்த காதலை திருமணதிற்கு பிறகும் ஹாசினியால் மறக்க முடியவில்லை. இதனால் காதலர்கள் இருவரும் கள்ளத்தனமாக பழகி வந்துள்ளனர். இவர்களின் பழக்கம் குறித்து நாளடைவில் ரமேஷுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஹாசினி தனது கணவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி, சம்பவத்தன்று ஹாசினி தனது காதலன் யுகேந்தருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, ரமேஷை மலைக்கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர்,திட்டமிட்டப்படி மல்லப்பா மலையின் மூன்றாவது வளைவில் தனது கைப்பையை கீழே தவறவிட்டது போல் நடித்துள்ளார். இதையறியாத ரமேஷ், பைக்கை நிறுத்திவிட்டு கைப்பையை எடுக்க சென்ற போது, அங்கு மறைந்திருந்த யுகேந்தர் மற்றும் 3 பேர் ரமேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
மேலும், ரமேஷின் சடலத்தை முட்புதரில் வீசியுள்ளனர். பின்னர், ரமேஷின் பைக்கில் யுகேந்தர், தனது காதலி ஹாசினி, மவுனிகாவை அழைத்துக்கொண்டு ரயிலில் சென்றுள்ளனர். இந்நிலையில், தலைமறைவாக உள்ள யுகேந்தர், ஹாசினி மற்றும் கொலைக்கு உதவிய 2 பேர் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Also Read: பாழடைந்த கட்டடம்… 2 சிறுமிகள்… பரபரப்பை கிளப்பிய வைரல் வீடியோ!



