போரூர் ஆர்இ நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். இவருடைய மனைவி ரோஸி ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து வந்துள்ளார். இந்த தம்பவதிகளுக்கு 9 வயதில் சூர்யா என்ற மகனும், ஏழு வயதில் நித்தியா என்ற மகளும் உள்ளன.
நேற்று முன்தினம் ரோஸி பேச்சு மூச்சு இல்லாமல் வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். தாய் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்த குழந்தைகள், பள்ளி விடுமுறை என்பதால் விளையாடச் சென்றுள்ளனர். பின்னர் அருகில் வசிக்கும் தாயின் சகோதரி வீட்டிற்குச் சென்ற அவர்கள், முந்தைய இரவு தாய்–தந்தை இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ரோஸியின் சகோதரி வீட்டிற்கு சென்று பார்த்த போது ரோஸி பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர், ரோஸியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ரோஸியை அடித்து கொலை செய்துவிட்டு சத்யராஜ் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் சுற்றித் திரிந்த சத்யராஜை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், சத்யராஜுக்கு குடிப்பழக்கம் இருந்ததும், மது போதையில் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. கடந்த 24ஆம் தேதி இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த அவர், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரது தலையை சுவற்றில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் ரோஸி மயங்கி விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவத்துக்குப் பிறகு யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக இரவு முழுவதும் வீட்டிலேயே இருந்து, காலையில் வேலைக்கு செல்வது போல சத்யராஜ் தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. எவ்வளவு தெரியுமா..? வெளியான முக்கிய அப்டேட்..!



