மத்திய பிரதேச மாநிலத்தில் புலியை சீண்டிய விவசாயி, புலியின் தாக்குதலால் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் உள்ள குஷியாலா என்ற கிராமத்தில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கு புலியை பார்த்த விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் புலியை விரட்டுவதற்காக அதனைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று துன்புறுத்தியுள்ளனர். அப்போது புலி தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசம் மாநிலம் குஷியாலா கிராமத்தைச் சார்ந்த சஞ்சய் என்பவர் தான், புலியின் தாக்குதலுக்கு பலியாகி இருக்கிறார். கிராமத்திற்குள் நுழைந்த புலியை பின்தொடர்ந்து சென்று குச்சியை வைத்து அதன் வாளினை சீண்டி இருக்கிறார் இதனால் ஆத்திரமடைந்த புலி அவரை கடுமையாக தாக்கி இருக்கிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் புலியின் தாக்குதலுக்குள்ளாகி வயல்வெளிகளில் கழுத்தில் ரத்தம் சொட்ட நடந்து செல்லும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. மேலும் இவர் மருத்துவமனை சிகிச்சையின் போது சில லோக்கல் செய்தி சேனல்களுக்கு அளித்த பேட்டியும் இணையதளங்களில் வைரலாகி உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வனத்துறையினர் பொதுமக்கள் யாரும் வனவிலங்குகளை விரட்டுகிறேன் என்று அவற்றின் அருகில் நெருங்க வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.