திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நூதனமான முறையில் தங்கத்தை கடத்தி வந்தவரை சுங்கத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்கப்பூர் மலேசியா துபாய் மற்றும் இலங்கை நாடுகளுக்கு அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று சிங்கப்பூரிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளுக்கான சுங்கத்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அதிலிருந்த ஒரு பயணி ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்தனர் அதிகாரிகள்.
அப்போது அந்த நபர் தனது உள்ளாடையில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. தனது உள்ளாடையில் பேஸ்ட் வடிவில் 281 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருக்கிறார் அந்த நபர். இதன் மதிப்பு 15,75,567/- ரூபாய் ஆகும். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.