ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 5 பேர், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 9 பேர் என மொத்தம் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டேவிட் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகை, புத்தளம் கடற்பரப்பில் நேற்று காலை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகிலிருந்த டிகோசன், முருகேசன், களஞ்சியராஜ், ஆனந் தன், பாலமுருகன், முருகதாஸ், கோட்டைசாமி, சக்திவேல், மாரியப்பன் ஆகிய 9 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர். அனைவரையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில்: இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது வேதனை அளிக்கிறது. இலங்கை சிறைகளில் 68 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், 235 மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசின் கைது நடவடிக்கைகளால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வாழ்வில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. எனவே, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் .