ராஜஸ்தானில் திருமண பிரச்சினை காரணமாக கணவர் மற்றும் அவரது வயதான பெற்றோருக்கு எதிராக மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார். பின்னர் இருவரும் விவாகரத்துக்கு (Divorce) ஒப்புக்கொண்டு, மனைவிக்கு நிரந்தர ஜீவனாம்சமாக (Permanent Alimony) ரூ.20 லட்சம் வழங்கப்படும் என உடன்பாடு ஏற்பட்டது. அந்த பணத்தையும் பெற்றுக்கொண்ட பிறகும், மனைவி பழைய குற்றவியல் வழக்கை தொடர்ந்து நடத்த முயன்றார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், “விவாகரத்து ஒப்பந்தத்தையும், ரூ.20 லட்சம் ஜீவனாம்சத்தையும் ஏற்றுக்கொண்ட பிறகு வழக்கை தொடர்ந்து நடத்துவது சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துவதாகும்” என்று கூறி, கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்தது.
தங்கள் மகனுடனான திருமண முரண்பாடுகளைத் தொடர்ந்து மருமகள் தாக்கல் செய்த குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சத்யபால் சர்மா (65) மற்றும் அவரது மனைவி சீதா தேவி (62) ஆகியோர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி அனுப் குமார் தண்ட் ஏற்றுக்கொண்டார்.
20 லட்சம் ரூபாய் ஜீவனாம்சத்துடன் விவாகரத்து ஒப்பந்தம்
இந்த ஜோடிக்கு திருமணம் நவம்பர் 2009-ல் நடைபெற்றது. 2013-ல், அந்தப் பெண் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பல்வேறு பிரிவுகளின் கீழ் (பிரிவு 498A உட்பட) குற்றச்சாட்டுகளை முன்வைத்து காவல் நிலையத்தில் புகார் (FIR) அளித்தார். 2018-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடவடிக்கைகள் தொடங்கின.
இதனிடையே, கணவர் விவாகரத்து கோரினார். ஜெய்ப்பூரில் உள்ள குடும்ப நல நீதிமன்றம் அக்டோபர் 2019-ல் திருமண உறவை ரத்து செய்தது. அந்தப் பெண் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும், இறுதியில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அந்தச் சர்ச்சை தீர்க்கப்பட்டது. ஒப்பந்தத்தின்படி, கணவர் 20 லட்சம் ரூபாயை நிரந்தர ஜீவனாம்சமாக வழங்கினார்.. இதன் விளைவாக டிசம்பர் 2024-ல் அப்பெண்ணின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. பிப்ரவரி 2025-ல் அதிகாரப்பூர்வ விவாகரத்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.
ஒப்பந்தம் செய்யப்பட்ட போதிலும், புகார்தாரர் குற்றவியல் வழக்கை திரும்பப் பெறவோ அல்லது சாட்சியம் அளிக்க விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகவோ இல்லை. பலமுறை சம்மன்கள் அனுப்பப்பட்டும், 2018 முதல் அவரும் அவரது சாட்சிகளும் சாட்சியம் அளிக்கத் தவறிவிட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
மாமனார்-மாமியார் மீதான நடவடிக்கைகள் ரத்து
“இணக்க ஒப்பந்தத்தின் அடிப்படையில் கணவரிடமிருந்து விவாகரத்து ஆணையைப் பெற்ற பிறகு, இப்போது தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி முரண்பாடாகச் செயல்பட புகார்தாரரை அனுமதிக்க முடியாது” என்று உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது..
மேலும், “தரப்பினரிடையே மேற்கொள்ளப்பட்ட மற்றும் நீதிமன்றத்தில் அவரால் உறுதிப்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களிலிருந்து, இது பரஸ்பர சம்மதத்தின் பேரில் விவாகரத்து பெறுவதற்கும், அதே நேரத்தில் குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்ட ஒரு சமரசம்/ஒப்பந்தம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மனுதாரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்வது சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதற்குச் சமம்” என்று முடிவு செய்த நீதிமன்றம், கணவரின் பெற்றோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது.
Read More : உணவில் உலோக Pin கிடைத்ததா..? வணிக நிறுவனங்களுக்கு FSSAI அவசர எச்சரிக்கை..! மீறினால் கடும் நடவடிக்கை..!



