தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகை ஷகீலா, தற்போது உடல்நலப் பிரச்சினை காரணமாக கழுத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். அதிக நேரம் மொபைல் போனை பயன்படுத்தியதும், தவறான உடல் நிலையில் நீண்ட நேரம் இருந்ததுமே தனது உடல்நல பாதிப்புக்கு காரணமாக அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஷகீலா, தனது யூடியூப் சேனல் மூலம் உடல்நிலை குறித்த தகவல்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். தற்போது கழுத்தில் ‘நெக் காலர்’ அணிந்திருக்கும் அவர், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அன்றாட பணிகளுக்குக்கூட பிறரின் உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட பிரச்சினை குறித்து பேசிய ஷகீலா, படுக்கையில் ஒருபுறமாகச் சாய்ந்தபடி நீண்ட நேரம் மொபைல் போனில் கேம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் சுமார் நான்கு மணி நேரம் வரை கேம் விளையாடியதாகவும், இடையில் டீ அல்லது காபி குடிப்பதற்காக மட்டும் எழுந்துவிட்டு மீண்டும் அதே நிலையில் கேம் விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
கேம் விளையாடிய பிறகும் ஓய்வெடுக்காமல் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பல மணி நேரம் ரீல்ஸ் பார்த்ததாக ஷகீலா தெரிவித்துள்ளார். நீண்ட நேரம் தவறான உடல் நிலையில் இருப்பதும், மொபைல் போனை அதிகமாக பயன்படுத்தியதும் தனது கழுத்தில் உள்ள முக்கிய நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவாக கழுத்து பகுதியில் ஏற்பட்ட பாதிப்புக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதற்காக சுமார் ரூ.3 லட்சம் செலவானதாகவும் ஷகீலா தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு படுக்கையில் இருந்து எழுவது, சாப்பிடுவது உள்ளிட்ட அன்றாட செயல்களுக்குக்கூட தற்போது பராமரிப்பாளர்களின் உதவி தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். தனது நிலையை வீடியோவில் நகைச்சுவையாக பகிர்ந்திருந்தாலும், மொபைல் பயன்பாடு தொடர்பாக ரசிகர்களுக்கு முக்கியமான எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.
“மொபைல் போன் மிகவும் பயனுள்ள சாதனம்தான். ஆனால், அதை தேவைக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம்” என ஷகீலா கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக குழந்தைகளிடம் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மொபைல் போனை பயன்படுத்தும்போது உடல் நிலைப்பாட்டிலும், தொடர்ந்து பயன்படுத்தும் நேரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே தனது அனுபவம் உணர்த்துவதாக ஷகீலா தெரிவித்துள்ளார்.
Also Read: பிரியாணியை விட்ட சிலம்பரசன்!… சைவ உணவுக்கு மாறியது ஏன்?



