கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சிக் கிராமம் உள்பட சில படங்களில் நாயகியாக நடித்த மலையாள நடிகையான சுவாசிகா, ‘லப்பர் பந்து’-க்குப் பிறகு பிஸியான குணசித்திர நடிகையாக மாறியிருக்கிறார். பின்னர் ‘மாமன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘நூறுசாமி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடித்துள்ள கருப்பு திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தது. இந்நிலையில், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணத்தின் ஆரம்ப காலத்தில் சந்தித்த கசப்பான அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
17 வயதில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்ததாகக் கூறிய ஸ்வாசிகா, ஆரம்ப நாட்களில் பல போலி ஆடிஷன்கள் மற்றும் மோசடிகளை சந்திக்க நேரிட்டதாக தெரிவித்துள்ளார். தனது முதல் தமிழ் திரைப்படமான ‘வைகை’ மூலம் கதாநாயகியாக அறிமுகமானதால், தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அதன் பிறகு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பள்ளிப் படிப்பை முடித்தவுடன், குடும்பத்தின் தயக்கத்தையும் மீறி சினிமா வாய்ப்புகளைத் தேடி சென்னைக்கு வந்ததாகவும், வாய்ப்புகள் கிடைக்காததால் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆடிஷன் என்ற பெயரில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், சில இடங்கள் பாதுகாப்பற்றதாகத் தோன்றியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
பின்னர்தான் அவை உண்மையான ஆடிஷன்கள் அல்ல என்பதை புரிந்துகொண்டதாகவும், தானும் தனது தாயாரும் பலமுறை இதுபோன்ற மோசடிகளில் சிக்கியதாகவும் ஸ்வாசிகா கூறியுள்ளார். பிரபல இயக்குநர்களை அறிமுகப்படுத்துவதாகவும், சிலர் நம்பவைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “கையில் ஒரு லட்ச ரூபாய் கொண்டு வந்தால் சினிமாவில் வாய்ப்பு நிச்சயம் என்றும் கூறினார்கள். அந்த வார்த்தைகளை நம்பி, அம்மா தன்னிடம் இருந்த தங்க நகைகளைக்கூட விற்று பணத்தை கொடுத்தார். ஆனால் பணத்தைக் கொடுத்த பிறகு, சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்பு கொள்ளக் கூட முடியவில்லை. நாங்கள் திரும்பி வந்தபோது, மேனேஜரைக் காணவில்லை. எங்களை ஏமாற்றிவிட்டு அவர் ஓடிவிட்டார். அதன் பிறகு ஊருக்கே திரும்பிப் போய்விடலாம் என்று அம்மா கூறினார்,” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற அனுபவங்களுக்குப் பிறகே மலையாள திரைப்படத் துறையில் கவனம் செலுத்த முடிவு செய்ததாகவும், அங்கு சொந்த மாநிலம் என்பதால் பாதுகாப்பாக இருப்போம் என்ற நம்பிக்கை இருந்ததாகவும் ஸ்வாசிகா கூறியுள்ளார். பல தடைகள், ஏமாற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் இருந்தபோதிலும், தனது தன்னம்பிக்கையே தன்னை முன்னேறச் செய்ததாகவும், ஒரு நாள் சினிமாவில் தனக்கான இடத்தை நிச்சயம் பிடிப்பேன் என்ற நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Also Read: இப்படி ஒரு கின்னஸ் சாதனையா? முத்தம் கொடுத்தே உலக சாதனையில் இடம்பிடித்த தம்பதி!



