அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. கடந்த வருடம் ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கினர். மேலும் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஒற்றை தலைமையாக உருவெடுத்து இருப்பதால் அவருடைய ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவருடைய ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மறுபுறம் ஓபிஎஸ் தரப்பு இந்த தீர்ப்பின் காரணமாக மிகப்பெரிய கவலையில் ஆழ்ந்திருக்கிறது. இந்த நிலையில் மதுரையில் நடந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இல்ல திருமண விழாவில் பங்கேற்றுக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக மனதில் பயம் இருந்தது என்று கூறியிருக்கிறார்.
மேலும் தீர்ப்பை நினைத்து நேற்று வரையில் கலங்கி போயிருந்தேன். இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை உதட்டில் இருந்த சிரிப்பு உள்ளத்தில் இல்லை. இங்கே இருக்கின்ற அம்மா கோவிலில் பிரார்த்தனை செய்தேன். ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளை வணங்கினேன். திருமண நாளில் தீர்ப்பும், சாதகமாகவும் வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டேன் எனக் கூறியிருக்கிறார் இபிஎஸ்.
ஜெயலலிதா எம்ஜிஆர் என்று இருபெரும் தலைவர்களும் அருள் வழங்கினார்கள் என்று குறிப்பிட்ட இ.பி.எஸ் தெய்வ தலைவர்கள் கொடுத்த வரப்பிரசாத தீர்ப்பு இது என்றும், 15 கோடி தொண்டர்களை காக்கும் தீர்ப்பு இன்று வெளியாகி இருக்கிறது. இனி அதிமுக தொண்டர்கள் தலைமையில் தான் இயங்கும் என்று கூறியிருக்கிறார்.