மியான்மரின் மத்திய சகைங் (Sagaing) பகுதியில் உள்ள ஒரு பௌத்த மடாலயத்தின் மீது நேற்று(வெள்ளிக்கிழமை) ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், ஒரு வார கால தியான பயிற்சியில் பங்கேற்றுக் கொண்டிருந்த 14 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேக்கு மேற்கே சுமார் 75 கி.மீ தொலைவில் உள்ள மியாங் டவுன்ஷிப்பின் ஸ்வெல் லே ஓ (Swel Le Oh) கிராமத்தில் காலை 9 மணி அளவில் இத்தாக்குதல் நடைபெற்றது.
மியாவ் நகராட்சியின் குடிமைப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் (CDSOM) செய்தித் தொடர்பாளர் ந்வே ஊ (Nway Oo) தகவலின்படி, கிராம விகாரை வளாகத்திற்குள் போர் விமானம் ஒன்று குண்டுகளை வீசியுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 பெண்கள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தியானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மேலும் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மியான்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான ஜனநாயக ஆதரவுப் படைகள் மற்றும் இனக்குழுக்களுக்கும் இடையே தீவிர மோதல்கள் நடந்து வருகின்றன. இப்பகுதியில் ராணுவம் தனது வான்வழி பலத்தை அடிக்கடி பயன்படுத்தி வருவதால், இது போன்ற விகாரைகள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் தாக்கப்பட்டு பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது



