பருவ காலத்தில் டெங்கு, ஃபுளு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்பதால் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. கடந்த 16-ந்தேதி தொடங்கியதில் இருந்து பருவமழை பரவலாக தமிழ்நாட்டில் பெய்கிறது. இதன் தொடர்ச்சியாக மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், சில இடங்களில் கனமழையும் பதிவாகும் என ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதன்படி, இன்று தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். தீபாவளி பண்டிகை தினமான நாளை (திங்கட்கிழமை) தமிழ்நாட்டில் அனேக இடங் களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
இந்தநிலையில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால் டெங்கு, ஃபுளு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மலேரியா நோயும் அதிகமாக காணப்படுகிறது. அதேபோல் திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் டைபாய்டு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது.கடந்த 10 நாட்களாக சென்னை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ஈரோடு, தஞ்சாவூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படிம் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகள், உபகரணங்கள் வைத்திருக்கவேண்டும் என்றும் ஜெனரேட்டர்கள், ஆக்ஸிஜன் வினியோக அமைப்புகள்72 மணி நேர தொடர் பயன்பாட்டுக்கு எரிபொருள் இருப்பை உறுதி செய்யவேண்டும். காய்ச்சல் படுக்கைகளை அதிகரித்து தயார் நிலையில் இருக்கவும் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Readmore: பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்… வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை…!



