உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஐஎன்எஸ் மாஹே மும்பையில் உள்ள கடற்படைத் தளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி தலைமை தாங்கினார்.
கொச்சியில் உள்ள கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம் கட்டமைத்துள்ள ஐஎன்எஸ் மாஹே, அது வடிவமைத்த 8 கப்பல்களில் முன்னணி கப்பலாகும். பெல், எல் அண்ட் டி டிஃபென்ஸ், மஹிந்திரா டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ், என்.பி.ஓ.எல் மற்றும் 20-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, இக்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் மாஹே 80 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது, தற்சார்பு இந்தியாவின் பிரகாசமான அடையாளமாக திகழ்கிறது. உள்நாட்டுமயமாக்கலை ஊக்குவிப்பதற்கான இந்திய கடற்படையின் தொடர் முயற்சிகளை இந்தக் கப்பல் கட்டுமானம் சுட்டிக்காட்டுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி, ஐஎன்எஸ் மாஹே ஒரு சக்திமிக்க புதிய கடல்சார் தளத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி, உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைத்தல், கட்டமைத்தல் மற்றும் ஈடுபடுத்துதல் ஆகியவற்றில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறனை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார். இந்தக் கப்பல், கடலோர பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் என்றும், நாட்டின் கடல்சார் நலன் பாதுகாப்பு மற்றும் கடற்படையின் திறனை கணிசமாக அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.



