அமெரிக்காவின் ஒரேகான் மாநிலம் ட்ரௌடேல் பகுதியில் அமைந்துள்ள அமேசான் நிறுவனத்தின் PDX9 விநியோக மையத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பணியிடத்தில் மயங்கி விழுந்த பணியாளரை சக பணியாளர்கள் யாரும் கண்டு கொள்ளாததால் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
தகவலின்படி, சுமார் 46 வயதுடைய அந்த ஊழியர் திடீரென தரையில் சரிந்து விழுந்துள்ளார். ஆனால், அவரைச் சுற்றியிருந்த மற்ற ஊழியர்கள் தொடர்ந்து தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்ததால், அவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கவனிக்கப்படாமல் கிடந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் கழித்து சக ஊழியர்கள் அவரை நெருங்க முயன்றுள்ளனர். ஆனால் ஊழியர்களுக்கு வேலை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
“திரும்பிப் பார்க்காதீர்கள்… வேலையை கவனிங்கள்” என்று மேற்பார்வையாளர்கள் கூறியதாக ஒரு ஊழியர் தெரிவித்துள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்ததன் பின்னரே அந்த பகுதி மூடப்பட்டது. இருப்பினும், அந்த ஊழியரின் மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து ரெட்டிட் தளத்தில் பலரும் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். கிடங்கில் அதிக வெப்பம், போதிய காற்றோட்டமின்மை போன்ற பிரச்சனைகள் இருந்ததாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். பணியிட சூழல் பாதுகாப்பற்றதாக இருந்ததாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு அங்குள்ள ஊழியர்கள் மனஅழுத்தத்திற்குள்ளாகியுள்ளனர். “அந்தக் கட்டிடத்திற்குள் மீண்டும் செல்லவே பயமாக உள்ளது” என ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமேசான் நிறுவனம் தரப்பில், “எங்கள் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்,” என்று தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தேவையான மனநலம் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம், பணியிட பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான அணுகுமுறை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
Read more: சென்னையில் இன்று பிரச்சாரம்.. விஜய்யின் வாகனத்தை பின்தொடரக் கூடாது! – என்.ஆனந்த் வேண்டுகோள்..



